தமிழ்: Unlocked Literal Bible

Updated ? hours ago # views See on DCS

Chapter 1

1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், 2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரையும் நினைவுகூர்ந்து , மகிழ்ச்சியால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து, 4 உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடே ஆராதித்து வரும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன் . 5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். 6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 8 ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக் குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல்,தேவ வல்லமைக் கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி. 9 அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 10 நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து காட்சியளித்ததினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். 11 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். 12 அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராய் இருக்கிறாரென்று உறுதிப்படுத்தியும் இருக்கிறேன். 13 நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின்அறிவுறைகளை கைக்கொண்டிரு. 14 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். 15 ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய். 16 ஒநேசிப்போருவின் குடும்பத்தாருக்குக் கர்த்தர் இரக்கங்கட்டளையிடுவாராக; அவன் அநேக முறை என்னை இலைப்பாரச்செய்தான்; என் சிறை இறுப்பை குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; 17 அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான். 18 அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும் படி, கர்த்தர் அவனுக்கு இரக்கம் செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே.

Chapter 2

1 ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. 2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஒப்புவி. 3 நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்வீரனாய் தீங்கனுபவி. 4 படையில் சேர்ந்துகொண்ட எவனும், தன்னைச்அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். 5 மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். 6 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும். 7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். 8 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள். 9 இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. 10 ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்து கொள்ளுகிறேன் . 11 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; 12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; 13 நாம் உண்மை இல்லாதவர்களாய் இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராய் இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். 14 இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் தோல்வியடைய செய்வதற்கு ஏதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு. 15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாயாயிரு. 16 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தி உள்ளவர்கள் ஆவார்கள்; 17 அவர்களுடைய வார்த்தை அழுகினவைகளைபோலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; 18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை தகர்த்து போடுகிறார்கள். 19 ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் பெயரைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு அடையாளமாய் இருக்கிறது. 20 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில மதிப்பு உயர்தவையாகவும் சில மதிப்பு குறைந்தவையாகவும் ஆனவைகள். 21 ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தம் ஆக்கப்பட்டதுமான மதிப்புக்குரிய பாத்திரமாயிருப்பான். 22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 23 புத்தியீனமும் அறிவில்லாத வாக்குவாதம் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. 24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை செய்கிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகத்திறமை உள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாய் இருக்கவேண்டும். 25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்க தக்கதாகவும், 26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

Chapter 3

1 மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 எப்படியெனில், மனிதர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தை உள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றி இல்லாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3 மெய்யானஅன்பு இல்லாதவர்களாயும், அனுசரித்து போகாதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சை அடக்கம் இல்லாதவர்களாயும், கொடுமை செய்கிறவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4 துரோகிகளாயும், துணிகரம் உள்ளவர்களாயும், இறுமாப்பு உள்ளவர்களாயும், தேவனுக்கு பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5 தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு, 7 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாய் இருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள். 8 யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் தீயகுனமுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். 9 ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும். 10 நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், 11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவை எல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். 12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க விருப்பமாய் இருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். 13 பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம் போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களுமாகவும் இருந்து மேன்மேலும் கேடு உள்ளவர்களாவார்கள். 14 நீ கற்று உறுதிசெய்துக் கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்து இருக்கிறதுமல்லாமல், 15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 16 வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்ப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நற்செயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனம் உள்ளவைகளாயிருக்கிறது.

Chapter 4

1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய தோற்றமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: 2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாய் திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து,கடிந்துகொண்டு, புத்தி சொல்லு. 3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்கள் சுய விருப்பங்களுக்கு ஏற்ற போதகர்களைத் தங்களுக்குத் மிகுதியாய் சேர்த்துக்கொண்டு. 4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும். 5 நீயோ எல்லாவற்றிலும் மனதெளிவுள்ளவனாயிரு, தீங்கு அனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. 6 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக அற்பணித்து போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் நேரம் வந்தது. 7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு கொடுப்பார் ; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைக் கொடுப்பார் . 9 நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு. 10 ஏனென்றால், தேமா இந்த உலகத்தின் மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். 11 லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே அழைத்துக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். 12 தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன். 13 துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாய்த் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. 14 கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக. 15 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். 16 நான் முதல்முறை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக. 17 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும்,யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப் பட்டேன் . 18 கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் எல்லா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 19 பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. 20 எரஸ்து கொரிந்துபட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். 21 மழைகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஆயத்தபடு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 22 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.