தமிழ்: Unlocked Literal Bible

Updated ? hours ago # views See on DCS

Chapter 1

1 ேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. 3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 4 அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவுக்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 5 பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6 அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். 7 தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 8 அவர், அந்தக் கிருபையை எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார். 9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படிபரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று , 10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். 11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக, 12 அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். 13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். 14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் உத்தரவாதமாய் இருக்கிறார். 15 எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர் மேலும் உள்ள உங்கள் அன்பையும் குறித்து நான் கேள்விப்பட்டு, 16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, 17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டும் என்றும், 18 அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்; 19 தாம் கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். 20 எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்துக்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படி செய்து, 22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

Chapter 2

1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் இறந்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார். 2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியும் நடந்துகொண்டீர்கள். 3 அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம். 4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 5 அக்கிரமங்களில் இறந்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்; 6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, 7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடு எழுப்பி, உன்னதங்களிலே அவரோடு உட்காரவும் செய்தார். 8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது அல்ல, இது தேவனுடைய ஈவு; 9 ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது அல்ல; 10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாய் இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். 11 எனவே, முன்பே சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம் பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள், 12 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியராகவும், நம்பிக்கையில்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவன் இல்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். 13 முன்பே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள். 14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி, 16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 17 அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார். 18 அப்படியே நாம் இருகூட்டத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தை அவர் மூலமாகப் பெற்றிருக்கிறோம். 19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாக இல்லாமல், பரிசுத்தவான்களோடு ஒரே நகரத்தாரும் தேவனுடைய குடும்பத்தினராக இருந்து, 20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து மூலைக்கல்லாக இருக்கிறார்; 21 அவர்மேல் மாளிகை முழுவதும் சீராக இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; 22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவன் தங்கும் இடமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

Chapter 3

1 இதினிமித்தம், பவுலாகிய நான் யூதரல்லாதோராயிருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன். 2 உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே;; 3 அதென்னவென்றால் யூதரல்லாதவர்கள் நற்செய்தியினால் உடன்பங்காளிகளுமாக, ஒரே சரீரத்திற்கு உரியவர்களுமாக, கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாக இருக்கிறார்கள் என்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார். 4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன். 5 அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; 6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. 7 தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன். 8 பரிசுத்தவான்கள் எல்லோரையும் விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதோருக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, 10 உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய ஒப்புயர்வற்ற ஞானமானது ஆலயத்தின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி, 11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 12 அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது. 13 ஆகையால் உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது. 14 இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்துக்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய, 15 நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, 16 நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், 17 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி, 18 எல்லா பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து; 19 அறிவுக்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லா பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன். 20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 21 தேவாலயத்திலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Chapter 4

1 எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து, 2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி, 3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள். 4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; 5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், 6 எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர். 7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. 8 எனவே, அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். 9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா? 10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார். 11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன் மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும், 12 பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும், 13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். 14 நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல் , மனுஷருடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவித காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல், 15 அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார். 16 அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற எல்லா பாகங்களினாலும் சரியாகச் சேர்த்து இணைக்கப்பட்டு, ஒவ்வொரு சரீர பாகங்களும் தன்தன் அளவுக்குத்தக்கதாக வேலை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்தி வளர்ச்சி உண்டாக்குவதற்காகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. 17 எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள். 18 அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராக இருந்து; 19 உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். 20 நீங்களோ இந்த விதமாக கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. 21 இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. 22 அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துவிட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிய ஆவி உள்ளவர்களாகி, 24 உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனுஷனை அணிந்துகொள்ளுங்கள். 25 அன்றியும், நாம் ஒருவருக்கு ஒருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும். 26 நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்கள் எரிச்சல் மறைந்துபோகட்டும்; 27 பிசாசுக்கு இடம் கொடுக்க வேண்டாம். 28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடம் இருந்து கொடுப்பதற்காக, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, முயற்சி செய்யவேண்டும். 29 கெட்டவார்த்தை எதுவும் உங்கள் வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள். 30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாமல் இருங்கள். 31 எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாத் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும். 32 ஒருவருக்கு ஒருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கு ஒருவர் மன்னியுங்கள்.

Chapter 5

1 1எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, 2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மை நேசித்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள். 3 மேலும், பரிசுத்தவான்களுக்கு தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. 4 அப்படியே அருவருப்பான செயல்களும், புத்தியில்லாத பேச்சும், பரியாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது. 5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. 6 இப்படிப்பட்டவைகளுக்காகக் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவகோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை மோசம்பண்ணாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; 7 அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள். 8 முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். 9 ஆவியின் கனி, எல்லா நல்லகுணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும். 10 கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். 11 கனி இல்லாத இருளான செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சொல்லுங்கள். 12 அவர்களால் மறைவான இடத்தில் செய்யப்படும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே. 13 அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளிக்காட்டப்படும்; வெளிக்காட்டப்படுகிறது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது. 14 எனவே," தூங்குகிற நீ விழித்து, இறந்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப் பண்ணுவார்" என்று சொல்லியிருக்கிறார். 15 எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு, 16 நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 17 எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள். 18 பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுசெல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; 19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கு ஒருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, 20 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, 21 தெய்வபயத்தோடு ஒருவருக்கு ஒருவர் கீழ்ப்படிந்திருங்கள். 22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள். 23 கிறிஸ்து ஆலயத்திற்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார். 24 எனவே, ஆலயமானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். 25 கணவர்களே, உங்கள் மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் ஆலயத்தில்மேல் அன்பாக இருந்து, 26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27 கறை ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள ஆலயமாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். 28 அப்படியே, கணவர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல்அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான். 29 தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் ஆலயத்தைப் பேணிக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான். 30 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம். 31 இதனால் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். 32 இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் ஆலயத்தைப்பற்றியும் சொல்லுகிறேன். 33 எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்கள் மனைவிகளிடமும் அன்பாக இருக்க வேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.

Chapter 6

1 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். 2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும், 3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம் பண்ணின முதலாம் கற்பனையாக இருக்கிறது. 4 பெற்றோரே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள். 5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து; 6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள். 7 அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து, 8 மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடே ஊழியம் செய்யுங்கள். 9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பாரபட்சம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள். 10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். 11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். 12 ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14 சத்தியம் என்னும் கச்சையை உங்கள் இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்க்கவசத்தை அணிந்தவர்களாகவும்; 15 சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலனியைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்; 16 பொல்லாதவன் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள். 17 இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 18 எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லா பரிசுத்தவான்களுக்காகவும் வேண்டுதல்பண்ண விழித்துக்கொண்டிருங்கள். 19 நற்செய்திக்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற தூதுவனாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதை தைரியமாய்ப் பேசவும், 20 நான் தைரியமாய் என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். 21 அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். 22 நீங்கள் எங்கள் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன். 23 பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.