தமிழ்: Unlocked Literal Bible

Updated ? hours ago # views See on DCS

Chapter 1

1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு: 2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; 3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; 4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; 5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; 6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; 7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்; 8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்; 9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்; 10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்; 11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்; 13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; 14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்; 15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; 16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். 17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகள் எல்லாம் ஆபிரகாம் முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலை முறைகளாகும். 18 இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19 அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்று இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 24 யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25 அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறும் வரைக்கும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

Chapter 2

1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை தொழுது கொள்ள வந்தோம் என்றார்கள். 3 ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 4 அவன் பிரதான ஆசாரியர் மக்களின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். 5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்: 6 யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். 7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: 8 நீங்கள் போய், பிள்ளையை குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான். 9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன்சென்றது. 10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். 11 அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப் போளத்தையும் பிள்ளைக்குக் காணிக்கையாக வைத்தார்கள். 12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள். 13 அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். 14 அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் அழைத்துக் கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 15 ஏரோதின் மரணம் வரைக்கும் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப் பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான். 17 புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங் கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, 18 எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. 19 ஏரோது மரித்த பின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: 20 நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் அழைத்துக் கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் உயிரை வாங்கத் தேடினவர்கள் மரித்து போனார்கள் என்றான். 21 அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் அழைத்துக் கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான். 22 ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய், 23 நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Chapter 3

1 அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: 2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் நெருங்கி இருக்கிறது என்று பிரசங்கம் செய்தான். 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செப்பனிடுங்கள் என்று வனாந்தரத்திலே அழைக்கிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. 4 இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையைத் தரித்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது. 5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப் போய், 6 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 11 மனம் திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராய் இருக்கிறார், அவருடைய காலனிகளை சுமக்கிறதற்கு நான் தகுதியற்றவன்; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் சுத்தப்படுத்தி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். 13 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். 14 யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். 15 இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

Chapter 4

1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4 அவர் மறுமொழியாக: மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உச்சியின்மேல் அவரை நிறுத்தி: 6 நீர் தேவனுடைய குமாரனேயானால் கீழே குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் தாங்கிக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். 7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். 8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்; 10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 11 அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள். 12 யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், 13 நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிலே வந்து தங்கியிருந்தார். 14 கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய யூதரல்லாதவருடைய கலிலேயாவிலே, 15 இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது என்று, 16 ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் நெருங்கியிருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். 18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன் பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்ற சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலை போட்டு கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: 19 என் பின்னே வாருங்கள், உங்களை மனிதரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 20 உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 21 அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படகிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் படகையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார். 24 அவருடைய புகழ் சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களை குணமாக்கினார். 25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான மககள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

Chapter 5

1 அவர் திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் அமர்ந்திருந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். 2 அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். 6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். 8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9 சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள். 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; 12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் அதிகமாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. 13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. 15 விளக்கைக் கொளுத்தி கூடையால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். 16 இவ்விதமாய், மனிதர் உங்கள் நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. 17 நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். 18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனிதருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். 20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், முன்னோருக்கு சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். 23 ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், 24 அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. 25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம்பொருந்து. 26 பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன். 27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோருக்கு சொலப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. 29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். 30 உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும். உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். 31 தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், விடுதலைப் பத்திரம் அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. 32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்ய தூண்டுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை திருமணம் செய்கிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான். 33 அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று முன்னோருக்கு சொலப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம் செய்ய வேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 35 பூமியின்பேரிலும் சத்தியம் செய்ய வேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்ய வேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். 36 உன் தலையின் மேலும் சத்தியம் செய்ய வேண்டாம், அதின் ஒரு முடியாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. 37 உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். 38 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் மேலாடையையும் விட்டுவிடு. 41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர கட்டாய படுத்தினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 43 உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்க செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 46 உங்களைச் நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 48 ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

Chapter 6

1 மனிதர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் நற்செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2 ஆகையால் நீ தர்மம் செய்யும்போது, மனிதரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக பெருமைபடாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 நீயோ நற்செயல் செய்யும்போது, உன் நற்செயல் மறைமுகமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. 4 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளிதோற்றமாய்ப் பலனளிப்பார். 5 அன்றியும் நீ ஜெபம் செயும்போது வெளி வேஷக்காரரைப்போல் இருக்கவேண்டாம்; மனிதர் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 6 நீயோ ஜெபம் செய்யும்போது, உன் அறைவீட்டுக்குள் நுழைந்து, உன் கதவைப் பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை பார்த்து ஜெபம் செய் ; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளிப்படையாய் உனக்குப் பலனளிப்பார். 7 அன்றியும் நீங்கள் ஜெபம் செய்யும் போது, யூதரல்லாதவர்களைப்போல வீண்வார்த்தைகளை திரும்பதிரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை பார்த்து நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். 9 நீங்கள் ஜெபம் செய்ய வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக. 10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 12 எங்கள் எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். 13 எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. 14 மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் குற்றங்களையும் மன்னியாதிருப்பார். 16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர் பார்க்கும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17 நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18 அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளித்தோற்றமாய்ப் பலனளிப்பார். 19 பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்கள் சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். 22 கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். 23 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! 24 இரண்டு எஜமான்களுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது. 25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் வாழ்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைப் பார்க்கிலும் வாழ்கையும், உடையைப் பார்க்கிலும் உடலும் விசேஷித்தவைகள் அல்லவா? 26 வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் உடல் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29 என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். 30 குறைந்த விசுவாசமுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 32 இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

Chapter 7

1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். 2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன? 4 இதோ, உன் கண்ணில் பெரிய மரம் இருக்கையில் உன் சகோதரனை பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போட முயற்சிசெய். 6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். 7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 9 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? 10 மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? 11 ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? 12 ஆதலால், மனிதர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம். 13 குறுகின வாசல்வழியாய் உள்ளே நுழையுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய் நுழைகிறவர்கள் அநேகர். 14 ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். 15 பொய் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள். 16 அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். 18 நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. 19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். 20 ஆதலால், அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள். 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பப்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் நுழைவானேயல்லாமல், என்னை பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் நுழைவதில்லை. 22 அந்நாளில் அநேகர் என்னை பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது பெயராலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது பெயராலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது பெயராலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; தீய செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். 25 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை பொழிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். 28 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், 29 மக்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Chapter 8

1 அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 4 இயேசு அவனை பார்த்து: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆனாலும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். 5 இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு பேருக்கு தலைவன் ஒருவன் அவரிடத்தில் வந்து: 6 ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். 7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். 8 நூறு பேருக்கு தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் நுழைய நான் தகுதியுள்ளவான் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான். 9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்ச்சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். 10 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை பார்த்து: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோக ராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். 12 ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13 பின்பு இயேசு நூறு பேருக்கு தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த மணி நேரத்திலே அவன் வேலைக்காரன் சுகமானான். 14 இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜூரமாய்க் கிடக்கிறதைக் கண்டார். 15 அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். 16 மாலை நேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லாரையும் சுகமாக்கினார். 17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 18 பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார். 19 அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். 20 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். 21 அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். 22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். 23 அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள். 24 அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ தூக்கத்திலிருந்தார். 25 அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மரித்துப்போகிறோம் என்றார்கள். 26 அதற்கு அவர்: குறைந்த விசுவாசமுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 27 அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். 28 அவர் அடுத்தகரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. 29 அவர்கள் அவரை பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள். 30 அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 31 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 32 அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் மரித்துப்போயின. 33 அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்த செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் நடந்தவைகளையும் அறிவித்தார்கள். 34 அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

Chapter 9

1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். 2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்க வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனை பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 3 அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவனை அவமதித்து பேசுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். 4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? 5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? 6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். 7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். 8 மககள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். 9 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், வரிவசூல் மையத்தில் அமர்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்பற்றிவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். 10 பின்பு அவர் வீட்டிலே உணவு பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீடரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 11 பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உணவு அருந்துகிறதென்னவென்று கேட்டார்கள். 12 இயேசு அதைக் கேட்டு: வியாதியஸ்தர்களுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 14 அப்பொழுது, யோவானுடைய சீடர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேக முறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர் உபவாசியாமல் இருக்கிறதென்னவென்று கேட்டார்கள். 15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். 16 ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு ஆடையை அதிகமாய்க் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். 17 புது திராட்சரசத்தைப் பழய தோல்பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல்பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல்பைகளும் கெட்டுப்போகும்; புது ரசத்தைப் புது தோல்பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார். 18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுது தான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். 19 இயேசு எழுந்து, தம்முடைய சீடரோடுகூட அவன் பின்னே போனார். 20 அப்பொழுது, பன்னிரண்டு வருடமாய் இரத்தப் போக்குள்ள ஒரு பெண்: 21 நான் அவருடைய ஆடையையாகிலும் தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். 22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை விடுவித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த பெண் சுகமானாள். 23 இயேசுவானவர் அந்த தலைவனுடைய வீட்டிலே வந்து, குழல் ஊதுகிறவர்களையும், சத்தமிடுகிற மக்களையும் கண்டு: 24 விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து ஏளனம் செய்தார்கள். 25 மக்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே நுழைந்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். 26 இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமாயிற்று. 27 இயேசு அவ்விடம் விட்டுப்போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 28 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை பார்த்து: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். 29 அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். 30 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 31 அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழை பிரசித்தம் செய்தார்கள். 32 அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 33 பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள். 34 பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 35 பின்பு, இயேசு எல்லா பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார். 36 அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் குழப்பம் அடைந்தவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, 37 தம்முடைய சீடர்களை பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; 38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

Chapter 10

1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 3 பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறு பெயருள்ள லெபேயு, 4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. 5 இந்தப் பன்னிரண்டு பேரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்கள் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் நுழையாமலும், 6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 7 போகையில், பரலோகராஜ்யம் அருகாமையில் இருக்கிறது என்று பிரசங்கியுங்கள். 8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் செய்யுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். 9 உங்கள் பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, 10 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது,. பாதணிகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் தகுதியுள்ளவனாயிருக்கிறான். 11 எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் நுழையும் போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள். 12 ஒரு வீட்டுக்குள் நுழையும்போது அதை வாழ்த்துங்கள். 13 அந்த வீடு தகுதியாயிருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதி அற்றவர்களாயிருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. 14 எவனாகிலும் உங்களை ஏற்றுக் கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும் போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். 15 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், பாம்புகளைப்போல விவேகமுள்ளவர்களும் புறாக்களைப்போலக் வஞ்சகமற்றவர்களுமாய் இருங்கள். 17 மனிதரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனை சபைகளுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை சாட்டையினால் அடிப்பார்கள். 18 அவர்களுக்கும் யூதரல்லாதவருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேச வேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். 21 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள். 22 என் பெயராலே நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதி வரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனித குமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி வரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 சீடன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. 25 சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? 26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. 27 நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம் செய்யுங்கள். 28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். 29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. 30 உங்கள் தலையிலுள்ள முடிகலெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. 31 ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள். 32 மனிதர் முன்பாக என்னை அறிக்கை செய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை செய்வேன். 33 மனிதர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். 34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். 35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். 36 ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் வீட்டாரே. 37 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு தகுதியாவன் அல்ல. 38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் அல்ல. 39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். 40 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். 41 தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். 42 சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை பெறாமல் போகான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Chapter 11

1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப்போனார். 2 அந்த நேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடரில் இரண்டுபேரை அழைத்து: 3 வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். 4 இயேசு அவர்களுக்கு மறு மொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; 5 குருடர் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 6 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 7 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 8 அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருத்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். 9 அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் செய்வான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். 11 பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு உணமையாகவே சொல்லுகிறேன். 12 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். 13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு. 14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். 15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 16 இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் அமர்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17 உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18 எப்படியெனில், யோவான் உண்ணாதவனும் குடியாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள். 19 மனித குமாரன் உண்கிரவகிறவராயும் குடிக்கிரவராயும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 20 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமல் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: 21 கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். 22 நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். 24 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 26 ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்துக்குப் பிரியமாயிருந்தது. 27 அணைத்தும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் விருப்பமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான். 28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

Chapter 12

1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள். 2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள். 3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4 அவன் தேவனுடைய வீட்டில் நுழைந்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத் தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே. 5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும், குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? 6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். 8 மனித குமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். 9 அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்க்கு வந்தார். 10 அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். 11 அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? 12 ஆட்டைப்பார்க்கிலும் மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார். 13 பின்பு அந்த மனிதனை பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சுகமாயிற்று. 14 அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள். 15 இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சுகமாக்கி, 16 தம்மைப் பிரசித்தம் செய்யாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 17 ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது: 18 இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமர செய்வேன், அவர் யூதரல்லாதவருக்கு நியாயத்தை அறிவிப்பார். 19 வாக்குவாதம் செய்யவுமாட்டார், சத்தமிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. 20 அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்க செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். 21 அவருடைய பெயரின்மேல் உலகில் உள்ளோர் நம்பிக்கையாய் இருப்பார்கள் என்பதே. 22 அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் காணவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார். 23 மக்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். 24 பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். 25 இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களை பார்த்து: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. 26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத்தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? 27 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். 28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 29 அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிட முடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். 30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாய் இருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதருக்கு மன்னிக்கப்படுவதில்லை. 32 எவனாகிலும் மனித குமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். 34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். 35 நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 36 மனிதர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். 38 அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள். 39 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனித குமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடே எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42 தென்தேசத்து ராஜபெண் பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜபெண் இந்தச் சந்ததியாரோடே எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 43 அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44 நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதை பார்த்து, 45 திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே அழைத்து கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் நடக்கும் என்றார். 46 இப்படி அவர் மக்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். 47 அப்பொழுது, ஒருவன் அவரை பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். 48 தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 49 தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.

Chapter 13

1 இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே அமர்ந்தார். 2 திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி அமர்ந்தார்; மக்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். 3 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். 4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதை சாப்பிட்டு விட்டது. 5 சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாய் இல்லாததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. 6 வெயில் ஏறினபோதோ, கருகிபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. 7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. 8 சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. 9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். 10 அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. 12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13 அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். 14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணார பார்த்தும் அறியாதிருப்பீர்கள். 15 இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. 16 உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். 17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 18 ஆகையால் விதைக்கிறவனை பற்றிய உவமையைக் கேளுங்கள். 19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாதவன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். 20 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் மகிழ்ச்சியோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; 21 ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலம் மாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். 22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலக கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். 23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். 24 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. 25 மனிதர் தூங்குகையில் அவனுடைய பொல்லாதவன் வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். 26 பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. 27 வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். 28 அதற்கு அவன்: பொல்லாதவன் அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் விருப்பமா? என்று கேட்டார்கள். 29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். 30 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். 31 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். 32 அது எல்லா விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லா பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். 33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார். 34 இவைகளையெல்லாம் இயேசு மக்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35 என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36 அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். 37 அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனித குமாரன்; 38 நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் பொல்லாங்கனுடைய பிள்ளைகள்; 39 அவைகளை விதைக்கிற பொல்லாங்கன் பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். 40 ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். 41 மனித குமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, 42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். 43 அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சயினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான். 45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. 46 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தை பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் வாங்குகிறான். 47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லா விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. 48 அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து,அமர்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை தூக்கி போடுவார்கள். 49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, 50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். 51 பின்பு, இயேசு அவர்களை பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்து கொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்து கொண்டோம், ஆண்டவரே, என்றார்கள். 52 அப்பொழுது அவர் அவர்களை பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோக ராஜ்யத்துக்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார். 53 இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, 54 தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55 இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? 56 இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57 அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு குறைவடையான் என்றார். 58 அவர்களுடைய விசுவாச குறைவினிமித்தம் அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.

Chapter 14

1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழை கேள்விப்பட்டு, 2 தன் வேலைக்காரரை பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறையில் வைத்திருந்தான். 4 ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்ல என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். 6 அப்படியிருக்க, ஏரோதின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம் செய்து ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். 7 அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8 அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். 9 ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, 10 ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானைனின் தலையை வெட்டு வித்தான். 11 அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். 12 அவனுடைய சீடர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம் செய்து , பின்பு போய் அந்தச் செய்தியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 13 இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படகில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். 14 இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களை சுகமாக்கினார். 15 மாலை நேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 16 இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றார். 17 அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். 18 அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 19 அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பங்களைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். 21 பெண்களும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 22 இயேசு மக்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அடுத்த கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 23 அவர் மக்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம் செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலை நேரமானபோது அங்கே தனிமையாயிருந்தார். 24 அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது. 25 இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26 அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 28 பேதுரு அவரை பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக தண்ணீரின் மேல் நடந்தான். 30 காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கி போகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். 31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாச குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். 32 அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33 அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். 34 பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35 அவ்விடத்து மனிதர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர் எல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36 அவருடைய ஆடையின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் குணமானார்கள்.

Chapter 15

1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: 2 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள். 3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக : நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5 நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்ய வேண்டிய உதவி எதாகிலும் உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதியாமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து, 6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள். 7 மாயக்காரரே, உங்களைக்குறித்து: 8 இந்த மக்கள் தங்கள் உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் மரியாதைபண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; 9 மனிதர்களுடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். 10 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களை பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள். 11 வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 12 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு மனவேதனை அடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். 13 அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். 14 அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். 15 அப்பொழுது, பேதுரு அவரை பார்த்து : இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். 16 அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாய் இருக்கிறீர்களா? 17 வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? 18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனை கறைப்படுத்தும். 19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். 20 இவைகளே மனிதனைத் கறைப்படுத்தும்; கை கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் கறைப்படுத்தாது என்றார். 21 பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23 அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார். 25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். 26 அவர் அவளை பார்த்து : பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 27 அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் சாப்பிடுமே என்றாள். 28 இயேசு அவளுக்குப் மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். 29 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே அமர்ந்தார். 30 அப்பொழுது, முடவர்கள் , குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான மக்கள் அழைத்துக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார். 31 ஊமையர் பேசுகிறதையும், ஊனர் குணமடைகிறதையும்,கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் மக்கள் கணடு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 32 பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார். 33 அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள். 34 அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். 35 அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36 அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிச்செலுத்தி , பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். 37 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பங்களை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள். 38 பெண்களும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட ஆண்கள் நாலாயிரம்பேராயிருந்தார்கள். 39 அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.

Chapter 16

1 பரிசேயரும், சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். 2 அவர்களுக்கு அவர் மறுமொழியாக:மாலையில் வானம் , செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாய் இருக்கும் என்று சொல்லுகிறீர்கள். 3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்கு காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4 இந்தப் பொல்லாத விபசாரசந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். 5 அவருடைய சீடர்கள் அக்கரை சேர்ந்த போது, அப்பங்களைக் கொண்டுவர மறந்து போனார்கள். 6 இயேசு அவர்களை பார்த்து: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். 7 நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனை செய்துக்கொண்டார்கள். 8 இயேசு அதை அறிந்து: குறைந்த விசுவாசமுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டு வராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை செய்கிறதென்ன? 9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 10 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவு கூராமலிருக்கிறீர்களா? 11 பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தை குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தை குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்து கொண்டார்கள். 13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீடரை பார்த்து : மனித குமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை பார்த்து : யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார். 21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்ல தொடங்கினார். 22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்து கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்து கொள்ள தொடங்கினான். 23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்திகாமல் மனிதருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். 24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து : ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். 25 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். 26 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்? 27 மனித குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். 28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனித குமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Chapter 17

1 ஆறு நாளைக்கு பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் அழைத்துக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் உடை ஒளியைப்போல வெண்மையாயிற்று. 3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4 அப்பொழுது பேதுரு இயேசுவை பார்த்து : ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 6 சீடர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். 7 அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதிருங்கள் என்றார். 8 அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை பார்த்து: மனித குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். 10 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரை பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். 11 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்துவது உண்மைதான். 12 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் விருப்ப படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனித குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். 13 அவர் யோவான்ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். 14 அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: 15 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான். 16 அவனை உம்முடைய சீடர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் குணமாக்க அவர்களால் முடியாமற்போயிற்று என்றான். 17 இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 18 இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் குணமானான். 19 அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 20 அதற்கு இயேசு: உங்கள் விசுவாச குறைவினாலே தான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் முடியாத காரியம் ஒன்றுமிராது என்று,உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21 இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். 22 அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களை பார்த்து: மனித குமாரன் மனிதர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். 23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள். 24 அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். 25 அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். 26 அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. 27 ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

Chapter 18

1 அவ்வேளையிலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4 ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். 5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் பெயரினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். 6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லை கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ! 8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதை பார்க்கிலும், முடவனாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் நுழைவதது உனக்கு நலமாயிருக்கும். 9 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் நித்திய ஜீவனுக்குள் நுழைவது உனக்கு நலமாயிருக்கும். 10 இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 மனித குமாரன் இழந்து போனதை இரட்சிக்க வந்தார். 12 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்ப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் காணாமற்ப் போனதை தேடாமலிருப்பானோ? 13 அவன் அதைக் கண்டுபிடித்தால்,காணாமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளை குறித்து மகிழ்சியாய் இருக்கிறதை பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய் மகிழ்சியாயிருப்பன் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 14 இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவனாகிலும், அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் பிரியமல்ல . 15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய். 16 அவன் செவிகொடாமல் போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. 17 அவர்களுக்கும் அவன் செவிகொடாமல் போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவி கொடாதிருப்பானானால், அவன் உனக்கு மாற்று மார்க்கத்தான் போலவும் ஆயக்காரனை போலவும் இருப்பானாக. 18 உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டி கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் இவ்வுலகத்திலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 20 ஏனென்றால், இரண்டு பேராவது மூன்று பேராவது என் பெயராலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். 21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான். 22 அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரம் அல்ல, ஏழெழுபதுமுறை மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 23 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் வெள்ளிக்காசு கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். 25 கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். 26 அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். 27 அந்த வேலைக்கார னுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலை செய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். 28 அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப் போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் பார்த்து, அவனைப் பிடித்து,கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். 29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். 30 அவனோ சம்மதியாமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத் தீர்க்கும் வரைக்கும் அவனைக் காவலில் வைத்தான். 31 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். 32 அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்கும் வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

Chapter 19

1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார். 2 திரளான மக்ககள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களை குணாமாக்கினார். 3 அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்க வேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்த காரணத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். 4 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், 5 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இனைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? 6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். 7 அதற்கு அவர்கள்: அப்படியானால், விவாகரத்து கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். 8 அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை. 9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை திருமணம் செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அவருடைய சீடர்கள் அவரை பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம் செய்கிறது நல்லதல்ல என்றார்கள். 11 அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாய் ஆக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாய் ஆக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். 13 அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் செய்யும் படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். 14 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, 15 அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார். 16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை பார்த்து: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். 17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். 18 அவன் அவரை பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; 19 உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்பு காட்டுவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு காட்டுவாயாக என்பவைகளையே என்றார். 20 அந்த வாலிபன் அவரை பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். 21 அதற்கு இயேசு: நீ தேவனுக்கு முழுமையுள்ளவனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 22 அந்த வாலிபன் மிகுந்த செல்வம் உள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கம் அடைந்தவனாய்ப் போய்விட்டான். 23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களை பார்த்து: செல்வந்தன் பரலோக ராஜ்யத்தில் நுழைவது எளிதல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள். 26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதரால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். 27 அப்பொழுது, பேதுரு அவரை பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். 28 அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனித குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் அமர்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 29 என் பெயரினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; 30 ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.

Chapter 20

1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளி பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். 3 மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: 4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5 மறுபடியும், ஆறாம், ஒன்பதாம் மணி அளவிலும் அவன் போய் அப்படியே செய்தான். 6 பதினோராம் மணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரை பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களை பார்த்து: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். 8 மாலை வேளையில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் நிர்வாகியை பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்தி வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். 9 அப்பொழுது பதினோராம் மணியளவில் சேர்க்கபட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளி பணம் வாங்கினார்கள். 10 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளி பணம் வாங்கினார்கள். 11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை பார்த்து: 12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரம் மாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். 13 அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக:நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? 14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போல பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம் . 15 என்னுடையதை என் விருப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாரள மனமுடையனாய் இருக்கிறபடியால், நீ பொறாமை கொள்ளலாமா என்றான். 16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்க பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ள பட்டவர்களோ சிலர் என்றார். 17 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடரையும் தனியே அழைத்து: 18 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனித குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, 19 அவரைப் பரியாசம் செய்யவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். 20 அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றாள். 21 அவர் அவளை பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், ஒருவன் உமது இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். 22 இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தைதை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். 23 அவர் அவர்களை பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பக்கத்திலும் என் இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் வேலையல்ல என்றார். 24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள். 25 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடை செய்கிறவனாய் இருக்கக்கடவன். 27 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடை செய்கிறவனாய் இருக்கக்கடவன். 28 அப்படியே, மனித குமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். 29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டு போகையில், திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள். 30 அப்பொழுது வழியருகே அமர்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 31 அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள். 32 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். 33 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்றார்கள். 34 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

Chapter 21

1 அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடரில் இரண்டுபேரை பார்த்து: 2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். 3 ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4 இதோ, உன் ராஜா சாந்த குணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, 5 தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 6 சீடர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7 கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். 8 திரளான மக்கள் தங்கள் ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள். 9 முன் நடப்பாரும் பின் நடப்பாருமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் பெயரினாலே வருகிறவர் போற்றப்படதக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 10 அவர் எருசலேமுக்குள் நுழைகையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 11 அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். 12 இயேசு தேவாலயத்தில் நுழைந்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து: 13 என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர் குகையாக்கினீர்கள் என்றார். 14 அப்பொழுது, குருடரும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார். 15 அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதன ஆசாரியரும் வேதபாரகரும் பார்த்து, கோபமடைந்து, 16 அவரை பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்க வில்லையா என்றார். 17 அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவில்தங்கினார். 18 காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. 19 அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் பார்த்து, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல் : இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. 20 சீடர்கள் அதைக் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். 21 இயேசு அவர்களை பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசம் உள்ளவர்களாய் இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 22 மேலும், நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். 23 அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்செய்கையில், பிரதான ஆசாரியரும் மக்களின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். 24 இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். 25 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; 26 மனிதரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து, 27 இயேசுவுக்குப் மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். 28 ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். 29 அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான். 30 இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. 31 இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து : ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் நுழைகிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 32 ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார். 33 வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, வெளிநாட்டுக்குப் போயிருந்தான். 34 அறுவடை காலம் நெருங்கிய போது, அதின் கனிகளை வாங்கிக் கொண்டுவரும்படி தன் வேலைக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். 35 தோட்டக்காரர் அந்த வேலைக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36 பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே வேலைக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். 37 கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38 தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39 அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் வெளியேதள்ளிக் கொலைசெய்தார்கள். 40 அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். 41 அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். 42 இயேசு அவர்களை பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? 43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற மக்களுக்குக் கொடுக்கப்படும். 44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 45 பிரதானன ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக் குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, 46 அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

Chapter 22

1 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: 2 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 3 அழைக்கப்பட்டவர்களை திருமணத்திற்கு அழைப்பு சொல்லும்படி அவன் தன் வேலைக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள். 4 அப்பொழுது அவன் வேறு வேலைக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும் கொழுத்த மிருகங்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். 5 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். 6 மற்றவர்கள் அவன் வேலைக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். 7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். 8 அப்பொழுது, அவன் தன் வேலைக்காரரை பார்த்து: திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாய் போனார்கள். 9 ஆகையால், நீங்கள் வீதிகளிலே போய், காணப்படுகிற யாவரையும் திருமணத்திற்கு அழைத்து கொண்டுவாருங்கள் என்றான். 10 அந்த வேலைக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் அழைத்துக்கொண்டு வந்தார்கள்; திருமணமன்றம் விருந்தாளிகளால் நிறைந்தது. 11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமண ஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: 12 நண்பனே, நீ திருமண ஆடை இல்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை பார்த்து: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற வெளியே உள்ள இருளிலே போடுங்கள் என்றான். 14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 15 அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனை செய்து, 16 தங்கள் சீடரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உன்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாய் போதிக்கிறவனென்றும், நீர் பட்சபாதம் இல்லாதவர் ஆகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 17 ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். 18 இயேசு அவர்கள் தீய குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? 19 வரிப் பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 20 அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். 21 இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். 22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள். 23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து: 24 போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் செய்து, தன் சகோதரனுக்குச் வாரிசுஉண்டாக்க வேண்டும் என்று மோசே சொன்னாரே. 25 எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம் செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான். 26 அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். 27 எல்லாருக்கும் பின்பு அந்த பெண்ணும் இறந்துபோனாள். 28 ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். 30 உயிர்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; 31 மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? 32 தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். 33 மக்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 34 அவர் சதுசேயரை பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 35 அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை முதன்மையானது என்று கேட்டான். 37 இயேசு அவனை பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு செலுத்துவாயாக; 38 இது முதலாம் பெரிய கற்பனை. 39 இதற்கு இனையாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு செலுத்துவாயாக என்பதே. 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். 41 பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை பார்த்து: 42 கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். 43 அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? 44 நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கி போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் அமரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. 45 தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். 46 அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்ல முடியாதிருந்தது. அன்று முதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

Chapter 23

1 பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து: 2 வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள்; 3 ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 4 சுமப்பதற்கு முடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். 5 தங்கள் செயல்களையெல்லாம் மனிதர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி, தங்கள் ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், 7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனிதரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். 8 நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார். 11 உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாய் இருக்கக்கடவன். 12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனிதர் நுழையாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்; நீங்கள் அதில் நுழைகிறதுமில்லை, நுழையப் போகிறவர்களை நுழைய விடுகிறதுமில்லை. 14 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம் செய்து , விதவைகளின் வீடுகளைப் அழித்துப் போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள். 15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மதத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். 16 குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம் செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம் செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 17 மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 18 மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம் செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம் செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 19 மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? 20 ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம் செய்கிறான். 21 தேவாலயத்தின்பேரில் சத்தியம் செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர் பேரிலும் சத்தியம் செய்கிறான். 22 வானத்தின் பேரில் சத்தியம் செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் செய்கிறான். 23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. 24 குருடரான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாய் இருக்கிறீர்கள். 25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. 26 குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. 27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். 28 அப்படியே நீங்களும் மனிதருக்கு நீதிமான்கள் என்று வெளியே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். 29 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: 30 எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31 ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். 32 நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள். 33 சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? 34 ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; 35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 36 இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவது போல நான் எத்தனை முறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள விருப்பமாயிருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல் போயிற்று. 38 இதோ, உங்கள் வீடு உங்களுக்கு பாழாக்கிவிடப்படும். 39 கர்த்தருடைய பெயரினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Chapter 24

1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். 2 இயேசு அவர்களை பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் அமர்ந்திருக்கையில், சீடர்கள் அவரிடத்தில் தனித்து வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 4 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5 ஏனெனில், அநேகர் வந்து, என் பெயரைத் வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். 6 போர்களையும் போர்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. 7 மக்களுக்கு விரோதமாய் மக்களும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் பெயரினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11 அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். 12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். 13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். 15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, 16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். 17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். 18 வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். 19 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. 20 நீங்கள் ஓடிப்போவது மழை காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 21 ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். 22 அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். 23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். 27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். 30 அப்பொழுது மனித குமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனித குமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லா கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31 மிகுதியாக தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். 32 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிற்று என்று அறிவீர்கள். 33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது, அவர் நெருக்கமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 34 இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 36 அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனித குமாரன் வரும் காலத்திலும் நடக்கும். 38 எப்படியெனில், பெருவெள்ளத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், மக்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், 39 பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகு மட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனித குமாரன் வருங்காலத்திலும் நடக்கும். 40 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். 41 இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். 42 உங்கள் ஆண்டவர் இன்ன நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். 43 திருடன் இன்ன இரவிலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் உடைக்க விடமாட்டானென்று அறிவீர்கள். 44 நீங்கள் நினையாத நேரத்திலே மனித குமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். 45 ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரருக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்? 46 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான். 47 தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, 49 தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, குடிகாரரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், 50 அந்த வேலைக்காரன் நினையாத நாளிலும், அறியாத நேரத்தலும், அவனுடைய எஜமான் வந்து, 51 அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

Chapter 25

1 அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். 2 அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாய் இருந்தார்கள். 3 புத்தியில்லாதவர்கள் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டு போகவில்லை. 4 புத்தியுள்ளவர்கள் தங்கள் விளக்குகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். 5 மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் தூக்க மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6 நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 7 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். 8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை பார்த்து: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 9 புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 10 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் திருமணவீட்டுக்குள் நுழைந்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. 11 பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 12 அதற்கு அவர்: உங்களை தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13 மனித குமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். 14 அன்றியும், பரலோகராஜ்யம் வெளிநாட்டுக்குப் பயணமாய்ப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரரை அழைத்து, தன் சொத்துக்களை அவர்கள் இடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. 15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளி பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப் பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப் பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான். 16 ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப் பணத்தை சம்பாதித்தான். 17 அப்படியே இரண்டு வெள்ளிப் பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப் பணத்தை சம்பாதித்தான். 18 ஒரு வெள்ளிப் பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். 19 அனேக நாட்களான பின்பு அந்த வேலைக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். 20 அப்பொழுது, ஐந்து வெள்ளிப் பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பனத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப் பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப் பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். 21 அவனுடைய எஜமான் அவனை பார்த்து : நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 22 இரண்டு வெள்ளிப் பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப் பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப் பணத்தை சம்பாதித்தேன் என்றான். 23 அவனுடைய எஜமான் அவனை பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 24 ஒரு வெள்ளிப் பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன். 25 ஆகையால், நான் பயந்து போய், உமது வெள்ளிப் பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். 26 அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. 27 அப்படியானால், நீ என் பணத்தை வங்கியில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, 28 அவனிடத்திலிருக்கிற வெள்ளிப் பணத்தை எடுத்து, பத்துத் வெள்ளிப் பணமுள்ளவனுக்குக் கொடுங்கள். 29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 30 பிரயோஜனமற்ற வேலைக்காரனாகிய இவனை வெளியிலுள்ள இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். 31 அன்றியும் மனித குமாரன் தமது மகிமை பொருந்தினவராய் அணைத்து பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பார். 32 அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். 34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35 பசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36 ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். 37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தனித்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தனிக்கவில்லை; 43 அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் சிறையில் அடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். 44 அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45 அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46 அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

Chapter 26

1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீடரை பார்த்து: 2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனித குமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். 3 அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மக்களின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து, 4 இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்து கொலை செய்யும்படி ஆலோசனை செய்தார்கள். 5 ஆகிலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்ய கூடாது என்றார்கள். 6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், 7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியை கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். 8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? 9 இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 10 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்த பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயளைச் செய்திருக்கிறாள். 11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாயிருக்கிறது. 13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 14 அப்பொழுது, பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: 15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். 17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் செய்ய விருப்பமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 18 அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை நெருக்கமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீடரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். 19 இயேசு கற்பித்தபடி சீடர்கள் போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 20 மாலை நேரமானபோது, பன்னிரெண்டு பேரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். 21 அவர்கள் உணவு அருந்துகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 22 அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். 23 அவர் மறுமொழியாக: என்னோடேகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். 24 மனித குமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனிதனால் மனித குமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். 26 அவர்கள் உணவு அருந்துகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி , அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் அருந்துங்கள்; 28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது ஒப்பந்தத்துக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. 29 இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை புதிதானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் இரசத்தை அருந்தும் நாள்வரைக்கும் இந்த இரசத்தை அருந்துவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 30 அவர்கள் நன்றி ப்பாட்டைப்பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 31 அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 32 ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். 33 பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமது நிமித்தம் எல்லாரும் பின் வாங்கினாலும், நான் ஒருக்காலும் பின் வாங்கமாட்டேன் என்றான். 34 இயேசு அவனை பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35 அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள். 36 அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களை பார்த்து: நான் அங்கே போய் ஜெபம் செய்யுமளவும் நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் என்று சொல்லி; 37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் அழைத்து கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். 38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, 39 சிறிது விலகி போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் செய்தார். 40 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை செய்கிறதைக் கண்டு, பேதுருவை பார்த்து: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். 42 அவர் மறுபடியும் இரண்டாம் முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் செய்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் செய்தார். 43 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரை செய்கிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. 44 அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாம் முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் செய்தார். 45 பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இனி நித்திரை செய்து இளைப்பாறுங்கள்; இதோ, மனித குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம் வந்தது. 46 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். 47 அவர் இப்படிப் பேசுகையில், பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் மக்களின் மூப்பரும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக் கொண்டுவந்தார்கள். 48 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். 50 இயேசு அவனை பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவை, பிடித்தார்கள். 51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காது அறுந்துபோக வெட்டினான். 52 அப்பொழுது, இயேசு அவனை பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள். 53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? 54 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய் நடைபெற வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். 55 அந்த வேளையிலே இயேசு மக்களை பார்த்து: திருடனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே அமர்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. 56 ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். 57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். 58 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாலிகளோடே உட்கார்ந்தான். 59 பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; 60 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: 61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். 62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். 63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனித குமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே. 66 உங்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். 67 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: 68 கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். 69 அந்த நேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். 70 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். 71 அவன், வாசல் மண்டபத்திற்கு போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். 72 அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான். 73 சிறிது நேரத்துக்குப் பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள். 74 அப்பொழுது அவன்: அந்த மனிதனை தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. 75 அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

Chapter 27

1 விடியற்காலமானபோது, எல்லா பிரதான ஆசாரியரும் மக்களின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்து, 2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். 3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரண தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதை பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டு வந்து: 4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். 5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி போட்டு விட்டு, புறப்பட்டுப்போய், நான்று கொண்டு செத்தான். 6 பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப் பெட்டியிலே இதை போட கூடாதென்று சொல்லி, 7 ஆலோசனை செய்த பின்பு, அந்நியரை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். 8 இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது. 9 இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, 10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. 11 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை பார்த்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 12 பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றம் சாட்டுகையில், அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. 13 அப்பொழுது, பிலாத்து அவரை பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். 14 அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். 15 காவல் செய்யப் பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது. 16 அப்பொழுது காவல் செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பெயர் பெற்ற ஒருவன் இருந்தான். 17 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 18 அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19 அவன் நியாயாசனத்தில் அமர்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். 20 பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் மக்களை தூண்டி விட்டார்கள். 21 தேசாதிபதி மக்களை பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். 22 பிலாத்து அவர்களை பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். 23 தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய் சத்தமிட்டுச் சொன்னார்கள். 24 கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 25 அதற்கு மக்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். 26 அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான். 27 அப்பொழுது, தேசாதிபதியின் போர் வீரர் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர் வீரரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, 28 அவர் ஆடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, 29 முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் தலையின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை கேலிசெய்த பின்பு, 30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் தலையில் அடித்தார்கள். 31 அவரைப் கேலிசெய்த பின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32 போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள். 33 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, 34 கசப்புக்கலந்த திராட்சை இரசத்தைஅவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். 35 அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36 அவர்கள் அங்கே அமர்ந்து, அவரைக் காவல் காத்து கொண்டிருந்தார்கள். 37 அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். 38 அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள். 39 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளை ஆட்டி: 40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்தித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். 41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் கேலிசெய்து: 42 மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். 43 தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். 44 அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட திருடரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். 45 ஆறுமணி முதல் ஒன்பதுமணி வரைக்கும் பூமியெங்கம் அந்தகாரம் உண்டாயிற்று. 46 ஒன்பதுமணி அளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக்கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடல் பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். 49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50 இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51 அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52 கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய உடல்களும் எழுந்திருந்தது. 53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் நுழைந்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 54 நூறுபேருக்கு தலைவனும் , அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55 மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள. 57 மாலையானபோது, இயேசுவுக்குச் சீடனும் செல்வந்தனுமாயிருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து, 58 பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் உடலை கேட்டான். அப்பொழுது, உடலை கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். 59 யோசேப்பு அந்த உடலை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, 60 தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான். 61 அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக அமர்ந்திருந்தார்கள். 62 ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: 63 ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. 64 ஆகையால், அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனை தந்திரமாய் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையை பார்க்கிலும் பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள்வரைக்கும் கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். 65 அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்த மட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றான். 66 அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையை பாதுகாப்பு செய்தார்கள்.

Chapter 28

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் அமர்ந்தான். 3 அவனுடைய தோற்றம் மின்னல் போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். 5 தூதன் அந்த பெண்களை பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; 7 சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். 9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்து கொண்டார்கள். 10 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். 11 அவர்கள் போகையில், காவல் வீரரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள். 12 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனை செய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: 13 நாங்கள் தூங்குகையில், அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனை திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். 14 இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்க வைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். 15 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது. 16 பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். 17 அங்கே அவர்கள் அவரைக் பார்த்து, பணிந்து கொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். 18 அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களை பார்த்து: வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்ககளையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் எல்லா நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.