Chapter 1
1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு, 2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் ஊழியம் செய்யவும் போதிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன். 3 அவர் சிலுவையில் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி , தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விபட்ட பிதாவின் வாக்குதத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். 6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். 7 அதற்கு அவர்:பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் உறுதியாய் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். 9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், வானத்துக்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 10 அவர் போகிற போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: 11 கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். 12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14 அங்கே இவர்களெல்லாரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 15 அந்நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று: 16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. 17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான். 18 தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்து போயிற்று. 19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது அதினாலே அந்த நிலம் அவர்களுடைய, மொழியிலே இரத்த நிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது. 20 சங்கீதபுத்தகத்திலே அவனுடைய குடியிருக்கும் வீடு அழிக்ககடவது ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது. 21 ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், 22 அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனே கூட இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக் குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டு பேரையும் நிறுத்தி: 24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, 25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
Chapter 2
1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3 அல்லாமலும் நெருப்பினால் தொடப்பட்ட நாவுகள்போல அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். 5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6 அந்தச் சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9 பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், 11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலி செய்தார்கள். 14 அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லாரும் தெரிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளை கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது. 17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை பொழிவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை காண்பார்கள்; உங்கள் மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்; 18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் மீட்கப்படுவான் என்று தேவன்உரைத்திருக்கிறார். 22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 23 அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். 24 தேவன் அவருடைய மரண வேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. 25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்; 26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; 27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர்களின் அழிவைக் காணமாட்டீர்; 28 ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். 29 சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 30 அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதை தெரிந்தபடியால், 31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். 32 இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறோம். 33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதத்தின் கீழே போடும்வரைக்கும், 35 நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். 36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவும் ஆக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் தெரியக்கடவர்கள் என்றான். 37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனம் திருந்தி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கு என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, முரண்பாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41 அவனுடைய வார்த்தைகளைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 42 அவர்கள் அப்போஸ்தலருடைய போதனைகளிலும், உறவிலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 43 எல்லோருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாய் இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். 45 நிலங்களையும் சொத்துகளையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடு இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு, 47 தேவனைத் துதித்து, மக்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் தேவாலயத்திலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
Chapter 3
1 ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி வேளையிலே பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் பிறவியிலேயே சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டு வந்தார்கள்;ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் ஆலய வாசல்களில் ஒன்றான அலங்காரம் என்ற வாசல் அருகில் அவனை வைப்பார்கள். 3 அவன்ஆலயத்திற்குள் நுழைகிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான். 4 பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை ஏக்கத்தோடே பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயராலே நீ எழுந்து நட என்று சொல்லி, 7 தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது. 8 அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களுடனேகூட ஆலயத்திற்குள் போனான். 9 அவன் நடக்கிறதையும்,தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லாரும் கண்டு: 10 ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள். 11 சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடும் இருக்கையில், மக்களெல்லாரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். 12 பேதுரு மக்களை பார்த்து: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது,சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன? 13 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். 14 பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு, 15 ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலை செய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். 16 அவருடைய பெயரில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லாருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்துக்கும் இந்த சுகத்தை கொடுத்தது. 17 சகோதரரே நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்கு தெரியும் 18 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வார்த்தையினாலும் முன் சொன்னவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். 19 ஆகவே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பவும், 20 உங்கள் குற்றங்கள் மன்னிக்கபடவும் நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். 21 உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வார்த்தையினாலும் முன்ன சொன்ன எல்லாம் நிறைவேறி முடியும் நாட்கள் வரும்வரை பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். 22 மோசே மூதாதையர்களைப்பார்த்து: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 23 அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லை கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இராதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான். 24 சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். 25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே செய்த ஒப்பந்தத்துக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். 26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
Chapter 4
1 அவர்கள் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, 2 அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபம் அடைந்து
3 அவர்களைப் பிடித்து, மாலை நேரமாய் இருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். 4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 5 மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபண்டிதரும், 6 பிரதானஆசாரியானாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூடி வந்து, 7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த அதிகாரத்தினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். 8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, 9 வியாதியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், 10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் சாதாரணமாய் நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்க்கல்லானவர். 12 அவராலேயன்றி வேறொருவராலும் மீட்பு இல்லை; நாம் மீட்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். 14 சுகமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமல் போயிற்று. 15 அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: 16 இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. 17 ஆகிலும் இது அதிகமாய் மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய் எச்சரிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டு, 18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதுவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 19 பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுடைய வார்த்தையை கேட்பதைப்பார்க்கிலும் உங்களுடைய வார்த்தைகளைக் கேட்பது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். 20 நாங்கள் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். 21 நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். 22 அற்புதமாய்ச் சுகமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். 23 அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக் கேட்டு, ஒன்று சேர்ந்து தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவன் நீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யுதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டம் கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவன் நீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 32 விசுவாச கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாய் இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாய் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. 34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. 36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், 37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
Chapter 5
1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் சொத்துக்களை விற்றார்கள். 2 தன் மனைவி சம்மதத்தோடு அவன் விற்றபணத்திலே ஒரு பகுதி மறைத்துவைத்து, ஒருபகுதியை கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே,சொத்தை விற்றதில் ஒரு பகுதியை மறைத்து வைத்து,பரிசுத்த ஆவியானவர் இடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4 அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்ற பின்பும் அதின் பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 5 அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, விழுந்து மரித்துபோனான் . இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. 6 வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள். 7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். 8 பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். 9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். 10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துபோனாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவன் அருகில் அடக்கம்பண்ணினார்கள். 11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று. 12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லாரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடி இருந்தார்கள். 13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் மக்கள் அவர்களை மேன்மைப்படுத்திப் பேசினார்கள் 14 அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 15 சுகவீனமானவர்களை படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். 16 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்த ஆவிகளால் துன்புறுத்தபட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். 17 அப்பொழுது பிரதானஆசாரியனும் அவனுடனேகூட இருந்த பிரிவினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, 18 அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். 19 கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: 20 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 21 அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள்.பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்து வரும்படி சிறைச்சாலை வேலைக்காரர்களை அனுப்பினார்கள். 22 வேலைக்கார்கள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: 23 சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். 24 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதானமான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்து பயத்தோடிருந்தார்கள். 25 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். 26 உடனே படைத்தலைவன் வேலைக்காரர்களோடு கூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், துன்புறுத்தாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். 27 அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதானஆசாரியன் அவர்களை நோக்கி: 28 நீங்கள் இயேசுவின் பெயரைக்குறித்துப் போதகம்பண்ணகூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். 29 அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனிதவர்களுக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. 30 நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, 31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். 32 இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு கொடுத்த பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். 33 அதை அவர்கள் கேட்டபொழுது,எரிச்சலடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள். 34 அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற நியாயபண்டிதர் கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, 35 சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 36 ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மரித்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள். 37 அவனுக்குப் பின்பு, மக்கள் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள். 38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்; 39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போரிடாதவர்களாய் இருக்கும் படிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் பெயரைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41 அவருடைய பெயருக்காக தாங்கள் அவமானமடைவதற்கு ஒருவராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல்உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.
Chapter 6
1 அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கரானவர்கள் , தங்கள் விதவைகள் அன்றாட பராமரிப்பில் திட்டமாய் பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு எதிராக முறுமுறுத்தார்கள். 2 அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல. 3 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம். 4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தை சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, 6 அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். 7 தேவவசனம் அதிகமாய்ப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். 8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தான். 9 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் வந்து, ஸ்தேவானோடு வாக்குவாதம் பண்ணினார்கள். 10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது. 11 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனுஷரைத் தூண்டிவிட்டு; 12 மக்களையும் மூப்பரையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; 13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த ஆலயத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்; 14 எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஆலயத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள். 15 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்க்க, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப் போல் இருக்கக் கண்டார்கள்.
Chapter 7
1 பிரதானஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான். 2 அதற்கு அவன்: சகோதரரே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: 3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். 4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் இறந்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். 5 இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுக்குச் சுதந்தரமாக கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்கு பண்ணினார். 6 அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள். 7 அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். 8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். 9 அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். 10 தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக வைத்தான். 11 பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் போனது. 12 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான். 13 இரண்டாம் முறை யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னை தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. 14 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான். 15 அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் இறந்து, 16 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். 17 ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்கு நிறைவேறும் நேரம் நெருங்கியபோது, 18 யோசேப்பை தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம் வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். 19 அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாய் நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை துன்பப்படுத்தினான். 20 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாயிருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். 21 அவன்வீட்டிற்கு வெளியே விடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். 22 மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். 23 அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது. 24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான். 25 தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர் தெரிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்து கொள்ளவில்லை. 26 மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். 27 ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்? 28 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். 29 இந்த வார்த்தையினாலே மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். 30 நாற்பது வருஷம் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினியிலே அவனுக்குத் தரிசனமானார். 31 மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில்வருகையில்: 32 நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான். 33 பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. 34 எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். 35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். 36 இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தான். 37 இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே. 38 சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே. 39 இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, 40 ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; 41 அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கைவேளைகளில் மகிழ்ந்திருந்தார்கள். 42 அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானமண்டல ஒளிகளுக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், 43 பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே. 44 மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது. 45 மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதோருடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். 46 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். 47 சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். 48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் தங்குவதில்லை. 49 வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாய் இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது; 50 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. 51 வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். 52 தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னமே அறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். 53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள் என்றான். 54 இவைகளை அவர்கள் கேட்டபொழுது. கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். 55 அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து: 56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் பார்க்கிறேன் என்றான். 57 அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து, 58 அவனை நகரத்துக்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள். 59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். 60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, உயிரைவிட்டான்.
Chapter 8
1 ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்நாட்களிலே எருசலேமிலுள்ள கிறிஸ்தவ சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள். 2 தெய்வபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை நல்லடக்கம் செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள். 3 சவுல் ஒவ்வொரு வீடாய்ப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைபிடித்து கிறிஸ்தவ சபையை அழித்துக்கொண்டிருந்தான். 4 சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றி நற்செய்தியை போதித்துவந்தார்கள். 5 அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான். 6 பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டும் கண்டும், அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். 7 அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களை விட்டுப்போனது. அநேக கைகால்கள் அசைக்க முடியாதவர்களும்,நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள். 8 அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. 9 சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான். 10 தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுடைய சொல்லை கேட்டு வந்தார்கள். 11 அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைத் திகைக்கவைத்ததினால் அவனை மதித்துவந்தார்கள். 12 தெய்வீக ஆளுகை மற்றும் இயேசுகிறிஸ்துவினுடைய பெயரின் சிறப்பு தன்மைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் நம்பியதால், ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 13 அப்பொழுது சீமோனும் நம்பி ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சார்ந்து கொண்டு, அவனால் செய்யப்பட்ட அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து திகைத்தான். 14 சமாரியர் தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். 15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் பெயராலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, 16 அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம் செய்து, 17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். 18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி பெறப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: 19 நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். 20 பேதுரு அவனை பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே வாங்கிக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட அழிந்து போகக்கடவது. 21 உன் இருதயம் தெய்வத்துக்கு முன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. 22 ஆகையால் நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்மாறி, தேவனைப்பார்த்து வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 23 நீ கசப்பான விஷத்திலும் குற்றஉணர்விலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். 24 அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான். 25 இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை ஆதாரமாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். 26 பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை பார்த்து: நீ எழுந்து, தெற்கு திசையாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்திரப்பாதை வழியாக போ என்றான். 27 அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; 28 ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே அமர்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். 29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். 30 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்கு புரிகிறதா என்றான். 31 அதற்கு அவன்: ஒருவன் எனக்கு புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படிப் புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான். 32 அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தபோடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். 33 அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே. 34 மந்திரி பிலிப்பை பார்த்து: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 35 அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேத வாக்கியத்தை அடிப்படையாக இயேசுவைக்குறித்தும் அவனுக்குப் போதித்தான். 36 இவ்விதமாய் அவர்கள் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். 37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று நம்புகிறேன் என்று சொல்லி; 38 இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39 அவர்கள் தண்ணீரை விட்டு கரையேறின பொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பிறகு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான். 40 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் போதித்துக்கொண்டுவந்தான்.
Chapter 9
1 சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடரை பயமுறுத்திக் கொலை செய்யும்படி பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; 2 இந்த மார்க்கத்தாராகிய ஆண்களையாகிலும்,பெண்களையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு உத்தரவுகளை கேட்டு வாங்கினான். 3 அவன் பயணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, திடீர் என்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; 4 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். 5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். 6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் பிரியமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 7 அவனுடனேகூடப் பயணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் செய்வதறியாமல் பிரமித்து நின்றார்கள். 8 சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து , அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். 9 அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் ஆகாரம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தான். 10 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீடன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி : அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். 11 அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; 12 அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். 13 அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனிதன் எருசலேமிலுள்ள உம்முடைய தேவப்பிள்ளைகளுக்கு எத்தனையோ தீங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். 14 இங்கேயும் உம்முடைய பெயரை ஆராதிக்கின்றயாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். 15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் யூதரல்லாதவர்களுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் சந்ததிகளுக்கும் என்னுடைய பெயரை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட நபராயிருக்கிறான். 16 அவன் என்னைக்குறித்த சாட்சியின் நிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். 17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்கு உள்ளே வந்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். 18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். 19 பின்பு அவன் உணவு சாப்பிட்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடர்களுடனே சிலநாள் இருந்து, 20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான். 21 கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இயேசுவின் பெயரை ஆராதிக்கின்றவர்களை துன்புறுத்தி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டி பிரதானஆசாரியர்களிடத்தில் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். 22 சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று தொடர்ந்துப் பேசி , தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களை இணங்கச்செய்தான் . 23 சில நாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். 24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 25 சீடர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள். 26 சவுல் எருசலேமுக்கு வந்து, சீடருடனே சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீடனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். 27 அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் பெயராலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். 28 அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து; 29 கர்த்தராகிய இயேசுவின் பெயராலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசி விவாதித்தான் ; அவர்களோ அவனைக் கொலைசெய்ய வகைதேடினார்கள் . 30 சகோதரர் அதை அறிந்து, அவனைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள். 31 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் வளர்ந்து பெருகின. 32 பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளிடத்திற்குப் போனான். 33 அங்கே எட்டு வருடமாய் கட்டிலின்மேல் கை,கால்கள் அசைக்க முடியாமல் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான். 34 பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். 35 லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 36 யோப்பா பட்டணத்தில் கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு பெண்சீடர் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். 37 அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். 38 யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் அருகாமையானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். 39 பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும்,மற்றஆடைகளையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். 40 பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி,சடலத்தின் பக்கமாய் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். 41 அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, தேவப்பிள்ளைகளையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான். 42 இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். 43 பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
Chapter 10
1 இத்தாலியா இராணுவத்தில் நூறு பேர் கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான். 2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான். 3 பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்தில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே, என்று அழைத்ததை தெளிவாய் தரிசனத்தில் பார்த்து, 4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. 5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனிதரை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு. 6 அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். 7 கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலை செய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, 8 எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான். 9 மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்கு அருகில் வருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான். 10 அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் தரிசனத்தில், 11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், 12 அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். 13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது. 14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான். 15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம் முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது. 16 மூன்றாம் முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 17 அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று: 18 பேதுரு என்று மறுபெயர் கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். 19 பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள். 20 நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். 21 அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான். 22 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் படைத்தலைவன் நூறுபேர்கொண்ட படைபிரிவுத் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே கட்டளைப்பெற்றார் என்றார்கள். 23 அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்கவைத்து வேண்டிய உதவிகளை செய்தான். மறுநாளிலே அவர்களுடன் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனோடு போனார்கள். 24 மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்து சேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். 25 பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். 26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான். 27 அவனோடு பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, 28 அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோ டு கலந்து அவனிடத்தில் போக்கும் வரவுமாயிருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார். 29 ஆகையால் நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன விஷயத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். 30 அதற்குக் கொர்நேலியு: நான்கு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: 31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது. 32 யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். 33 அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். 34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பாரபட்சம் பார்ப்பவர் அல்ல என்றும், 35 எந்த இனமாய் இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு பிரியமானவன் என்றும் நிச்சயமாய் தெரிந்திருக்கிறேன். 36 எல்லோருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாய்க் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே. 37 யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தபின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே. 38 நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின யாவரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார். 39 யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை சிலுவையில் அடித்துக் கொலைசெய்தார்கள். 40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படி செய்தார். 41 என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச் செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடே சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்களே காணும்படிச் செய்தார். 42 அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் இறந்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். 44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். 45 அவர்கள் பலவித மொழிகளைப் பேசுகிறதையும், தேவனை புகழ்வதையும், 46 பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம் செய்யப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள். 47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு யாராவது தண்ணீரை விலக்கி வைக்கலாமா என்று சொல்லி, 48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனை கேட்டுக்கொண்டார்கள்.
Chapter 11
1 யூதரல்லாதவரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள். 2 பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: 3 விருத்தசேதனம் பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீ போய், அவர்களோடே சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள். 4 அதற்குப் பேதுரு விஷயத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விளக்கிச் சொல்லத் தொடங்கி: 5 நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. 6 அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன். 7 அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். 8 அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற எதுவும் எப்போதும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். 9 இரண்டாவது முறையும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்கவேண்டாம் என்று சொல்லியது. 10 இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. 11 உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நான் தங்கியிருந்த வீட்டுக்குமுன்னே வந்துநின்றார்கள். 12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடு வந்தார்கள்; அந்த மனிதனுடைய வீட்டுக்குள் நுழைந்தோம் . 13 அவனோ தன் வீட்டில் ஒரு தேவதூதன் நிற்கிறதை பார்த்ததாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபெயர் கொண்ட சீமோனை அழைத்து வரும்படி மனிதரை அந்த இடத்திற்கு அனுப்பு; 14 நீயும் உன் குடும்பத்தாரும் மீட்கப்படுவதற்கு உண்டான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான். 15 நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். 16 யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைத்துப் பார்த்தேன். 17 எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நம்புகிற நமக்கு தேவன் வரத்தை அருளினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அருளினபோது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார் என்றான். 18 இவைகளை அவர்கள் கேட்டபொழுது: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் யூதரல்லாதோருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 19 ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்கு மட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். 20 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள். 21 கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள். 22 எருசலேமிலுள்ள ஆலயமக்கள் இந்த விஷயங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள். 23 அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாய் நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான். 24 அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 25 பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைப்பார்த்து, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். 26 அவர்கள் ஒரு வருஷமாய் ஆலய மக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டாயிற்று. 27 அந்த நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு பேரரசனுடைய நாட்களிலே நடந்தது. 29 அப்பொழுது சீடரில் அவரவர்கள் தங்கள் தங்கள் திறமைக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவி செய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். 30 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.
Chapter 12
1 அக்காலத்திலே ஏரோது ராஜா விசுவாசிகளில் சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3 அது யூதருக்குப் பிரியமாய் இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. 4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல் காக்கும்படி நான்கு போர் வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான். 5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவல்காக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது, விசுவாசிகள் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். 6 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர் வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். 7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது. 8 தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையை போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். 9 அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னே சென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான். 10 அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன் வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி வழியாய் நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். 11 பேதுருவுக்குத் நினைவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் நினைவுகளுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாய் புரிந்துகொண்டேன் என்றான். 12 அவன் இப்படி புரிந்து கொண்ட பின்பு , மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள். 14 அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள். 15 அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள். 16 பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். 17 அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் அவர்களைப் பார்த்து கையசைத்து, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விளக்கி, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான். 18 பொழுது விடிந்தபின்பு பேதுருவைக் குறித்துக் காவலருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. 19 ஏரோது அவனைத் தேடி, அவன் அங்கு இல்லை என்றபோது, காவல்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயா தேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே தங்கியிருந்தான். 20 அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்களுக்கு வசமாக்கி, அவன் மூலமாய் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள். 21 குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜஉடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுடன் பேசினான். 22 அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனைத் தண்டித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். 24 தேவவசனம் வளர்ந்து பெருகியது. 25 பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர் கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமை விட்டுத் திரும்பிவந்தார்கள்.
Chapter 13
1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள தேவாலயத்திலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், தேசத்தின் அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள். 2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார். 3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். 4 அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள். 5 சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். 6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள். 7 அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடுகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். 8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரை உடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய , அவர்களோடு எதிர்த்து நின்றான். 9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: 10 எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய வழிகள் பொய்யென்று சொல்வதை நிறுத்த மாட்டாயோ? 11 இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் பார்வை இல்லாதவனாய் இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான். 12 அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். 13 பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவில் இருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான். 14 அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வு நாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, உட்கார்ந்தார்கள். 15 மோசேயின் நியாயப்பிரமாண புத்தகமும் தீர்க்கதரிசன புத்தகமும் படித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் மக்களுக்குப் புத்தி சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களுக்கு ஆள் அனுப்பினார்கள். 16 அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையசைத்து: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற மக்களே, கேளுங்கள். 17 இஸ்ரவேலராகிய இந்த மக்களுடைய தேவன் நம்முடைய முற்பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய் வாழ்ந்தபோது அவர்களை உயர்த்தி, தமது வல்லமையுள்ள கரத்தினால் அங்கிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, 18 நாற்பது வருஷங்களாய் வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து, 19 கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து, 20 பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார். 21 அதுமுதல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுடைய மகனான சவுலை நாற்பது வருடங்களாய் அவர்களுக்குக் கொடுத்தார். 22 பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளை எல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார். 23 அவனுடைய வம்சத்திலே தேவன் தமது வாக்கின்படியே இஸ்ரவேலுக்கு மீட்பராக இயேசுவை எழும்பப்பண்ணினார். 24 இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனம் திரும்புவதற்கான ஞானஸ்நானத்தைப் பற்றி யோவான் இஸ்ரவேலர் எல்லோருக்கும் போதித்தான். 25 யோவான் தன் பணிகளை முடிக்கிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் இல்லை, இதோ, எனக்குப்பின்பு ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளை அவிழ்ப்பதற்கும்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான். 26 சகோதரரே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 27 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும், அவரைத் தெரியாமலும், ஓய்வுநாட்களில் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களைத் தெரியாமலும், அவரை தண்டனைக்குள்ளாக்கியதினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள். 28 கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் ஒன்றும் அவரிடத்தில் இல்லாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள். 29 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை சிலுவையிலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். 30 தேவனோ அவரை உயிரோடு எழுப்பினார். 31 இயேசு கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குத் தம்மோடு வந்தவர்களுக்கு அநேகநாட்கள் தரிசனமானார்; அவர்களே மக்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள். 32 நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மை பெற்றேன்என்று இரண்டாம் சங்கீத புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, 33 இயேசுவை உயிரோடு எழுப்பினதினாலே தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிய வாக்கை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்கு நற்செய்தியாய் அறிவிக்கிறோம். 34 அவர் மரணம் அடையாதபடிக்கு அவரை உயிரோடு எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று உரைத்தார். 35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர் என்று வேறொரு சங்கீத புத்தகத்தில் சொல்லியிருக்கிறது. 36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய விருப்பத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு மரணமடைந்து, தன் முற்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். 37 தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. 38 ஆதலால் சகோதரரே, இயேசு கிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், 39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளில் இருந்து விடுதலையாகி நீதிமான்களாக்கப்பட முடியாமலிருந்ததோ, விசுவாசிக்கிற எவனும் அவைகளிலிருந்து இயேசுவாலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருப்பதாக. 40 அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே: 41 அசட்டைப்பண்ணுகிறவர்களே, பாருங்கள், ஆச்சரியப்பட்டு அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடத்துவேன், ஒருவன் அதை உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நடக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் என்றான். 42 அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படும்பொழுது, அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று யூதரல்லாதோர் கேட்டுக்கொண்டார்கள். 43 ஜெப ஆலய கூட்டம் முடிந்தபின்பு, யூதரிலும் யூதமார்கத்தை பின்பற்றின பக்தியுள்ளவர்களில் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். 44 அடுத்த ஓய்வுநாளிலே பட்டணத்தார் அனைவரும் தேவவசனத்தைக் கேட்பதற்காக கூடிவந்தார்கள். 45 யூதர்கள் மக்கள் கூட்டங்களைப் பார்த்தபோது பொறாமைப்பட்டு, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிராகப் பேசி, அவர்களை அவமதித்தார்கள். 46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்திய ஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று நினைத்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோரிடத்திற்கு போகிறோம். 47 நீர் பூமியின் கடைசிவரைக்கும் மீட்பாய் இருப்பதற்கு உம்மை மக்களுக்கு ஒளியாகவைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். 48 யூதரல்லாதோர் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். 49 கர்த்தருடைய வசனம் அந்த தேசமெங்கும் பிரபலமானது. 50 யூதர்கள் பக்தியும் கனமும் பெற்ற பெண்களையும் பட்டணத்து முதலாளிகளையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்கு வெளியே அவர்களைத் துரத்திவிட்டார்கள். 51 இவர்கள் தங்கள் கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள். 52 சீடர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.
Chapter 14
1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் உள்ளே பிரவேசித்து யூதரிலும் கிரேக்கரிலும் திரளான மக்கள் நம்பத் தக்கதாகப் பிரசங்கித்தார்கள். 2 நம்பிக்கை இல்லாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் யூதரல்லாதவர்களுடைய மனதை தூண்டிவிட்டு , பகையுண்டாக்கினார்கள். 3 அவர்கள் அங்கே அநேகநாள் வாழ்ந்து கர்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாய்ப் போதகம் பண்ணினார்கள்; அவர் தமது சத்தியமுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அதிசயங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவு பண்ணினார் . 4 பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள். 5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும்என்று,யூதரரல்லாதவர்களும், யூதரும் அவர்கள் அதிகாரிகளும் தர்க்கம்பண்ணுகையில், 6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கு ஓடிப்போய்; 7 அங்கே இயேசுவின் நற்செய்தியை பிரசங்கம் பண்ணினார்கள். 8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் முடவனாயிருந்து , ஒருபோதும் நடவாமல், கால்கள் செயலற்றவனாய் உட்கார்ந்து, 9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப் பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்குஉண்டென்று கண்டு , 10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். 11 பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி, 12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள். 13 அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான ஆலய மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்த மக்களோடு கூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். 14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் துணிகளைக் கிழித்துக் கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: 15 மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரையும் அவைகளிலுள்ளயாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்க்கு திரும்ப வேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 16 கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், 17 அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். 18 இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது . 19 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக் கொண்டு போனார்கள். 20 சீடர்கள் அவனைச் சூழ்ந்து நிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்க்குள்ளே போனான் . மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப் போனான். 21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியை பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினப் பின்பு , லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, 22 சீடருடைய மனதைத் தைரியப்படுத்தி,நம்பிக்கையிலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று சொன்னார்கள். 23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் நம்பிக்கை வைத்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். 24 பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, 25 பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். 26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப் பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 27 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக் கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, 28 அங்கே சீடருடனேகூட அநேக நாள் தங்கியிருந்தார்கள் .
Chapter 15
1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய கட்டளையின்படியே விருத்தசேதனம் செய்யப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம் பண்ணினார்கள். 2 அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். 3 அப்படியே அவர்கள் தேவாலய மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். 4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, தேவாலய மக்களாலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்கள் மூலமாக செய்தவைகளை எல்லாம் அறிவித்தார்கள். 5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். 6 அப்போஸ்தலரும், சபை மூப்பரும் இந்த விஷயத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். 7 மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். 8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்; 9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார். 10 இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்க முடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்? 11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் மீட்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் மீட்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான். 12 அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாய் இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அதிசயங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள். 13 அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, நான் சொல்வதைக் கேளுங்கள். 14 தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு ஆசீர்வாதம் அருளினவிதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே. 15 அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது. 16 எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமத்தால் எனக்கு சொந்தமாக அழைக்கப்படும் எல்லா மக்களும், கர்த்தரைத் தேடும்படி, 17 நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் சரிசெய்து நிறுத்துவேன் என்று இவைகளை எல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 18 உலகம் உருவானது முதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது. 19 எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களை வேதனை படுத்தக்கூடாது என்றும், 20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உடலுறவு வைக்காமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். 21 மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம் முதல் எல்லா பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான். 22 அப்பொழுது தங்களில் சிலரை அழைத்துக்கொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலர், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாய்ப்பட்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர் கொண்ட யூதாவும் சீலாவுமே. 23 இவர்கள் கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்: 24 எங்களிடத்தில் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்கள் மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால், 25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு, 26 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாய்ப்பட்டது. 27 அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள். 28 என்னவெனில், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உடலுறவு வைக்காமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்க வேண்டுமென்பதே. 29 மிக முக்கியமான இவைகளைத் தவிர வேறு பாரமான எந்தவொரு விஷயத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாய்ப்பட்டது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். 30 அவர்கள் அந்தியோகியாவுக்கு வந்து, ஆலய மக்களைக் கூட்டிச் சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள். 31 அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள். 32 யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாய் இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி, 33 சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள். 34 ஆனாலும் சீலாவுக்கு அங்கே தங்கியிருப்பது நலமாய்ப்பட்டது. 35 பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே தங்கியிருந்து, மற்ற மக்களுக்கும் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் போதித்துக்கொண்டிருந்தார்கள். 36 சிலநாட்களுக்குப் பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற எல்லா பட்டணங்களிலும் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கலாம் வாரும் என்றான். 37 அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். 38 ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். 39 இதைக்குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் உண்டானபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். 40 பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, 41 சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம் செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான்.
Chapter 16
1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீடன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதப்பெண், அவன் தகப்பன் கிரேக்கன். 2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சிப் பெற்றவனாயிருந்தான். 3 அவனைப் பவுல் தன்னோடுகூட கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அங்கிருந்த யூதர்களெல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அவர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான். 4 அவர்கள் பட்டணங்களுக்குப் போகும்போது, எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்படி அவர்களுக்குச் சொன்னார்கள். 5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. 6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துச்சென்ற போது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்ல வேண்டாமென்று பரிசுத்த ஆவியினாலே தடைசெய்யப்பட்டு, 7 மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டுக்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை. 8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். 9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டானது; அதென்னவென்றால், மக்கெதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று பவுலை வேண்டிக்கொண்டதாக இருந்தது. 10 அந்த தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தார் என்று நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப், 11 துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் சென்று, 12 அங்கிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ரோமர் குடியேறின பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாட்கள் தங்கியிருந்தோம். 13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய் ஆற்றின் அருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்குப் போதித்தோம். 14 அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார். 15 அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களைப் பார்த்து: நீங்கள், நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள். 16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகும்போது குறி சொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள். 17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், மீட்பின் வழியை நமக்கு தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாய் சொன்னாள். 18 அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: ஆவியே, நீ இவளை விட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளை கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியே போனது. 19 அவளுடைய எஜமான்கள் தங்கள் வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். 20 அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி, 21 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர். 22 அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு எதிராக வந்து. அதிகாரிகள் அவர்கள் ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; 23 அவர்களை அதிகமாய் அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளை கொடுத்தார்கள். 24 அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உட்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். 25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26 திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது. 27 சிறைச்சாலைக்காரன் தூக்கம்தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலைசெய்து கொள்ளப்போனான். 28 அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு நீயே எந்தத்தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான். 29 அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, 30 அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். 31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, 32 அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். 33 மேலும் அந்த இராத்திரிவேளையிலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடு இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாயிருந்தான். 35 பொழுது விடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள். 36 சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலை செய்யும்படி அதிகாரிகள் கட்டளை கொடுத்து அனுப்பியுள்ளார்கள்; எனவே நீங்கள் இப்பொழுது புறப்பட்டு சமாதானத்தோடு போங்கள் என்றான். 37 அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்காமல், வெளிப்படையாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலை செய்கிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை விடுதலை செய்து வெளியே அனுப்பிவிடட்டும் என்றான். 38 காவலர்கள் இந்த வார்த்தைகளை சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து, 39 அவர்களோடு தயவாய் கெஞ்சிப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள். 40 அப்படியே அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளின் வீட்டிற்குப்போய், சகோதரர்களைப் பார்த்து , அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார்கள்.
Chapter 17
1 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது. 2 பவுல் தன் வழக்கத்தின்படியே அங்கு போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி, 3 கிறிஸ்து பாடுபடவும் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று, நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களில் இருந்து காண்பித்தான். 4 அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் அநேகரும், கனம் பெற்ற பெண்களில் அநேகரும் விசுவாசித்து, பவுல் சீலாவிடம் சேர்ந்துகொண்டார்கள். 5 விசுவாசிக்காத யூதர்கள் வைராக்கியத்தோடு பொல்லாத மனிதர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, பட்டணத்தில் கலவரம் உண்டாக்கி, யாசோனுடைய வீட்டைச் சுற்றிவளைத்து, அவர்களைப் பட்டணத்து மக்களிடம் இழுத்துக்கொண்டுவரப் பார்த்தார்கள். 6 அவர்கள் அங்கு இல்லாததால் , யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். 7 இவர்களை யாசோன் தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். இவர்கள் எல்லோரும் இயேசு என்னும் வேறு ஒருவனை ராஜா என்று சொல்லி, பேரரசனுடைய கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சத்தமிட்டு, 8 இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். 9 பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். 10 அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். 11 அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள். 12 அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கரில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள். 13 பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்த போது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள். 14 உடனே சகோதரர்கள் பவுலைக் கடல் வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள். 15 பவுலைக் கூட்டிச்சென்றவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே பவுல், சீலாவையும் தீமோத்தேயுவையும் சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான். 16 அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் போது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைப் பார்த்து, தன் மனதில் அதிக வைராக்கியம் கொண்டு, 17 ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தையில் பார்ப்பவர்களோடும் தினமும் பேசிக்கொண்டிருந்தான். 18 அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனோடு வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனைப் போல இருக்கிறான் என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் போதித்ததினால் அப்படிச் சொன்னார்கள். 19 அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு கூட்டிக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற இந்த புதிய உபதேசம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா? 20 நீ சொன்ன அநேக வினோதமான விஷயங்களை எங்கள் காதுகளில் கேட்டோம்; அதின் விளக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறோம் என்றார்கள். 21 அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான விஷயங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்கள் நேரத்தைச் செலவழித்தார்கள். 22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எல்லா விஷயத்திலும் உங்களை அதிக பக்தியுள்ளவர்களாகப் பார்க்கிறேன். 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைகளை கவனித்துப் பார்த்தபொழுது,'' அறியப்படாத தேவனுக்கு" என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைப் பார்த்தேன்; நீங்கள் அறியாமல் ஆராதனை செய்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின ஆண்டவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் தங்குவதில்லை. 25 எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை. 26 மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய அவரை மக்கள் எப்படியாவது கண்டுபிடிக்க அவரைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார். 28 ஏனென்றால் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். 29 நாம் தேவனுடைய வம்சமாய் இருப்பதினால், மனுஷனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக் கூடாது. 30 மக்களின் அறியாமையின் நாட்களை தேவன் பார்க்காதவர் போல இருந்தார்; இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார். 31 ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பார்; அந்த மனுஷனை உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். 32 மரணம் அடைந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலி செய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்கிறோம் என்றார்கள். 33 எனவே, பவுல் அவர்களைவிட்டு போய்விட்டான். 34 சிலர் பவுலோடு சேர்ந்து கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பெயருள்ள ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.
Chapter 18
1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; 2 யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டு போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான். 3 அவர்கள் கூடாரம் அமைக்கின்ற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான். 4 ஓய்வு நாட்களிலே இவன் ஜெபஆலயத்திலே, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான். 5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் தெரிவித்தான். 6 அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராக பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்கள் இரத்தபழி உங்கள் தலையின் மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி, 7 அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அருகில் இருந்தது. 8 ஜெபஆலயத் தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாய் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். 9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாய் இருக்காதே; 10 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்ய முடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார். 11 அவன் ஒரு வருஷம் ஆறு மாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம் பண்ணிக்கொண்டு வந்தான். 12 கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியான போது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்: 13 இவன் வேதப்பிரமாணத்துக்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள். 14 பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத செயலாயிருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது. 15 ஆனால் இது வார்த்தைகளுக்கும், பெயர்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் சம்பந்தப்பட்ட விஷயமாய் இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, 16 அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான். 17 அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெபஆலயத் தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக் குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை. 18 பவுல் அநேகநாள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்துக்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடு கூடப் போனார்கள். 19 அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டுப் பிரிந்து, ஜெபஆலயத்திற்குச் சென்று, யூதருடனே பேசிக்கொண்டிருந்தான். 20 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல், 21 வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு, 22 செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், ஆலய மக்களைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான். 23 அங்கே சிலகாலம் தங்கியிருந்த பின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான். 24 அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான். 25 அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை மட்டும் தெரிந்தவனாயிருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாய்க் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான். 26 அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத்தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள். 27 பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்ற பொழுது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். 28 அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே தைரியமாகப் பேசி , இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.
Chapter 19
1 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீடரைக் கண்டு: 2 நீங்கள் விசுவாசிகளானபோது , பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாய்களாயிருக்க வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயராலே ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். 7 அந்த மக்களின்கூட்டம் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள். 8 பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்து அடுத்தவைகளைக் குறித்து கலந்துரையாடி , புத்திசொல்லிக்கொண்டு வந்தான். 9 சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீடரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக் கொண்டிருந்தான். 10 இரண்டு வருடகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். 11 பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்து காண்பித்தார். 12 அவனுடைய சரீரத்திலிருந்து தலைப்பாகைகளையும் ,கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. 13 அப்பொழுது நாடோடிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் பெயரைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். 15 அசுத்தஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16 அசுத்த ஆவியையுடைய மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, பலவந்தம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள , அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். 17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. 18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் மந்திர சூனிய வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். 19 மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகை பார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக் காசாகக் கண்டார்கள். 20 இவ்வளவு வல்லமையாய் கர்த்தருடைய வசனம் உலகமெங்கும் பரவிற்று . 21 இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றி நடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் தீர்மானம் பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி, 22 தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலநாட்கள் ஆசியாவிலே தங்கினான். 23 அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று. 24 எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். 25 இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மக்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். 26 இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலே மாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக மக்களுக்குப் போதித்து, அவர்களை தன்பக்கமாகச் சேரத்துக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். 27 இதனால் நம்முடைய தொழில் அற்றுப் போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் நினைவில்லாமல் போகிறதற்கும், ஆசியா முழுமையும் உலகமுழுவதும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். 28 அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். 29 பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு மண்டபத்துக்கு பாய்ந்தோடினார்கள். 30 பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீடர்கள் அவனைப் போகவிடவில்லை. 31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்கு நண்பராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, மண்டபத்துக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். 32 கூட்டத்தில் குழப்பமுண்டாகி , சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. 33 அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையால் சைகை காட்டி ,மக்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான். 34 அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். 35 பட்டணத்து அவைத் தலைவன் மக்களை அமைதிப்படுத்தி : எபேசியரே,இந்த பட்டணம் மகா தேவியாகிய தியானாளின் கோவிலும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கிறதென்று அறியாதவன் உண்டோ? 36 இதை எவரும் மறுக்கமுடியாத காரியமாகையால், நீங்கள் பதற்றங்கொண்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். 37 இந்த மனிதரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியை நிந்தித்துப் பேசுகிறவர்களுமல்ல. 38 தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன் மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, ஆளுனர்கள், இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். 39 நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக் குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது தொடர்ந்து கூடுகின்ற சபையில் பேசி அதை தீர்த்துக்கொள்ளலாம். 40 இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு எதுவும் இல்லாதபடியால், இந்த கலகத்தைக் குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி, 41 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
Chapter 20
1 கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவுக்கு புறப்பட்டுப் போனான் 2 அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்கு புத்தி சொல்லி,உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்கு சென்றான் 3 அங்கே அவன் மூன்று மாதம் வசித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலை செய்யும்படி இரகசியமாய் யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். 4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டைச்சேர்ந்த தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் துணைக்கு வந்தார்கள். 5 இவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். 6 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறி ஐந்துநாட்கள் பயணத்திற்குப் பின்பு பிலிப்பி பட்டணத்திற்கு வந்து அங்கிருந்து துரோவா பட்டணத்துக்குச் சென்று, அங்கே அவர்களிடம் ஏழுநாட்கள் தங்கியிருந்தோம். 7 வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும் பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான். 8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது. 9 அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து, பவுலின் போதனைகளை நீண்ட நேரம் கேட்டு, தூக்க மயக்கத்தினால், மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தான். 10 உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். 11 பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். 12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள். 13 பவுல் ஆசோ பட்டணம் வரைக்கும் தரை வழியாய்ப் போகத் திட்டமிட்டிருந்தான் , அவன் திட்டமிட்டபடியே சென்றான், நாங்கள் கப்பல் ஏறி, துரோவா பட்டணத்திற்கு கடல் வழியாகச் சென்றோம் . 14 அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம். 15 அடுத்தநாளில் கீயு தீவுக்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து, 16 பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் தங்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல் , எபேசு பட்டணத்தில் இருந்து கடந்து போக வேண்டுமென்று தீர்மானித்து, மறுநாளிலே சாமு தீவை அடைந்து , துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம். 17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, ஆலயத்தின் மூப்பரை வரவழைத்தான். 18 அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் இருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 19 நான் மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன். 20 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, 21 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். 22 இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது . 23 தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதை மட்டும் அறிந்திருக்கிறேன். 24 ஆகிலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன். 25 இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்ஜியத்தைக் குறித்து பிரசங்கம் பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன். 26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால், 27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன். 28 ஆகையால், உங்களைக் குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது ஆலயத்தை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். 31 எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்தி சொன்னதை நினைத்து விழித்திருங்கள். 32 இப்பொழுதும் சகோதரரே, உங்கள் பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். 33 ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது. 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். 36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால் படியிட்டு, ஆலய மூப்பரிடம் சேர்ந்து ஜெபம் பண்ணினான். 37 அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாய்த் துக்கப்பட்டு, 38 பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல் வரைக்கும் அவனோடு சென்றார்கள்.
Chapter 21
1 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து புறப்பட்டு நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து, 2 அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம். 3 சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாய் இருந்தது. 4 அந்த இடத்திலே வாழ்ந்துவந்த சீடர்களைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாட்கள் தங்கினோம். அவர்கள் பவுலைப் பார்த்து: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பரிசுத்த ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள். 5 அந்த நாட்கள் முடிந்து, நாங்கள் புறப்பட்டுப் போகும்போது, அவர்கள் எல்லோரும் மனைவி மற்றும் பிள்ளைகளோடு எங்களை வழியனுப்ப வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினோம். 6 அவர்களிடத்தில் விடை பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள். 7 நாங்கள் கப்பல் பயணத்தைமுடித்து, தீரு பட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, விசுவாச சகோதரர்களைச் சந்தித்து, அவர்களை வாழ்த்தி அவர்களோடு ஒருநாள் தங்கினோம். 8 மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்துக்கு வந்து, ஏழு நபர்களில் ஒருவனாகிய பிலிப்பு என்னும் நற்செய்தியாளர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினோம். 9 தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னிப் பெண்களாகிய நான்கு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். 10 நாங்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருக்கும் போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல் கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். 12 இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம். 13 அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் சோர்ந்து போகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்றான். 14 அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம். 15 அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம். 16 செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள். 17 நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, விசுவாச சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள். 18 மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பரெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள். 19 பவுல் அவர்களை வாழ்த்தி, தன் ஊழியத்தினாலே தேவன் யூதரல்லாதோர்களிடம் செய்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாய் விளக்கிச்சொன்னான். 20 யாக்கோபும் அங்கு இருந்தவர்களும் அதைக் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் பவுலைப் பார்த்து: சகோதரனே, யூதர்களில் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளாயிருப்பது உமக்குத் தெரியும், அவர்கள் எல்லோரும் மோசேயின் நியாய பிரமாணத்துக்கு கவனமாய் கீழ்ப்படிகிறவர்களாய் இருக்கிறார்கள். 21 யூதரல்லாதோரோடு இருக்கிற யூதரெல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவும் வேண்டியதில்லை என்று நீர் சொல்லி, அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதனை செய்கிறீர் என்று இவர்கள் உம்மைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். 22 இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என்று அவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கோபத்தோடு இங்கு வருவார்கள். எனவே உம்மைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது உண்மையில்லை என்பதைக் காட்ட நீ ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும் . 23 ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறதை நீர் செய்யவேண்டும்; அது என்னவென்றால், தேவனிடம் உடன்படிக்கை செய்துகொண்ட நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள். 24 அவர்களோடு நீயும் தேவாலயத்திற்கு சென்று, உம்மை சுத்திகரிப்புச் செய்துகொண்டு, அவர்கள் பலி செலுத்துவதற்கும், தலைசவரம் செய்துகொள்வதற்கும் ஆகும் செலவை நீரே கொடுக்கவேண்டும்; நீர் அவர்களோடு இருப்பதையும், அப்படி செய்வதையும் மக்கள் பார்க்கும்பொழுது, அவர்கள் உம்மைப் பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய் என்றும், நீ மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவரென்றும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள். 25 விசுவாசிகளான யூதரல்லாதவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து, விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும்,கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும், தகாத உடலுறவு வைக்காமலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினோம் என்றார்கள். 26 மறுநாளிலே பவுல் அந்த நான்கு மனிதர்களோடு சேர்ந்து தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலியை செலுத்தி முடிக்கும்வரைக்கும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான். 27 அந்த ஏழுநாட்களும் நிறைவேறும்பொழுது ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, மக்களெல்லோரையும் தூண்டிவிட்டு, அவனை இழுத்து: 28 இஸ்ரவேலரே, உதவி செய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்தஇடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள். 29 எபேசு தேசத்தை சேர்ந்த துரோப்பீமு என்பவன் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள். 30 அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது. 31 அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்யும் போது, எருசலேம் முழுவதும் கலக்கமாய் இருக்கிறது என்று ரோம இராணுவ அதிபதிக்குச் செய்தி வந்தது. 32 உடனே அவன் போர்வீரர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அங்கே ஓடினான்; ரோமஅதிபதியையும் போர்வீரர்களையும் அவர்கள் பார்த்தவுடனே பவுலை அடிக்கிறதை நிறுத்திவிட்டார்கள். 33 அப்பொழுது ரோமஅதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான். 34 அதற்கு மக்கள் பல காரியங்களைச் சொல்லி அதிகமாக கூச்சல் போட்டார்கள்; அதிக சத்தத்தினாலே அதிபதிக்கு ஒன்றும் புரியாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். 35 அவன் படிகள்மேல் ஏறினபோது மக்கள் கூட்டம் அவனுக்கு பின்னே சென்று, 36 இவனைக் கொல்லவேண்டும் என்று மிகுந்த கோபமாய் சத்தம் போட்டதினாலே, போர்வீரர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாய் இருந்தது. 37 அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற நேரத்தில், அவன் ரோமஅதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்று கிரேக்க மொழியிலே கேட்டான். அதற்கு அவன்: உனக்கு கிரேக்க மொழி தெரியுமா? 38 பலநாட்களுக்கு முன்னே கலகம் உண்டாக்கி, நான்கு ஆயிரம் கொலைபாதகர்களை வனாந்திரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் நீதானே என்றான். 39 அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள புகழ்பெற்ற தர்சு பட்டணத்தைச் சேர்ந்த யூதன்; மக்களுடனே பேசுவதற்கு எனக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான். 40 அவன் அனுமதி அளித்த போது, பவுல் படிகளின்மேல் நின்று மக்களைப்பார்த்து அமைதியாய் இருக்கச் சொல்லி கை அசைத்தான்; உடனே மிகுந்த அமைதி உண்டானது; அப்பொழுது அவன் மக்களுடைய சொந்த மொழியான எபிரெய மொழியிலே பேசத்தொடங்கினான்:
Chapter 22
1 சகோதரரே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிற நியாயங்களை கவனித்து கேளுங்கள் என்றான். 2 அவன் எபிரெய மொழியிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்: 3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேத பிரமாணத்தின்படியே திட்டமாய் போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லாரும் தேவனைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்களாயிருக்கிறது போல நானும் வைராக்கியம் உள்ளவனாயிருந்தேன். 4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும் வரை துன்பப்படுத்தினேன். 5 அதற்கு பிரதான ஆசாரியரும் மூப்பர்யாவரும் சாட்சி கொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரருக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களை தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குபோனேன். 6 அப்படி நான் புறப்பட்டு போகும் வழியில் தமஸ்குவுக்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. 7 நான் தரையிலே விழுந்தேன். அந்நேரம்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். 9 அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. 10 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ;அங்கே நீ செய்யவேண்டிய ஆயத்தங்கள் எல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார். 11 அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன். 12 அப்பொழுது வேதபிரமாணத்தின் படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதராலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன், 13 என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, உனக்குப்பார்வை கிடைப்பதாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனை உற்றுப்பார்த்தேன். 14 அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்து கொள்ளவும்,நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். 15 நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் எல்லா மனிதருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். 16 இப்பொழுது நீ தயங்குவதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். 17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கையில், நான் ஆவிக்குள்ளாக்கி, அவரைப் பார்த்தேன். 18 அவர் என்னைப்பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார். 19 அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும், 20 உம்முடைய சாட்சியாய் வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். 21 அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதர்கள் அல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான். 22 இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள். 23 இவ்விதமாய் அவர்கள் கோஷமிட்டு தங்கள் மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூவிக்கொண்டிருக்கையில், 24 சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படி கோஷமிடுகிற காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான். 25 அதன்படி அவர்கள் அவனை கயிற்றால் இருக கட்டும்போது, பவுல் அருகில்நின்ற நூற்றுக்கு அதிபதியை பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான். 26 நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாதிபதியிடத்தில் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனிதன் ரோமன் என்றான். 27 இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான். 28 சேனாதிபதி அவனைப்பார்த்து : நான் அதிக பணம் கொடுத்து இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்த சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான். 29 அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். தளபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டினதற்காகப் பயந்தான். 30 பவுலின் மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
Chapter 23
1 பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுபார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விசயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்கு முன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். 2 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்கு அருகில் நின்றவர்களை பார்த்து: இவன் வாயில் அடியுங்கள் என்று ஆணையிட்டான். 3 அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீர் நியாயபிரமாணத்துக்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். 4 அருகில் நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை தவறாகப் பேசலாமா என்றார்கள். 5 அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான். 6 பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பகுதியும் பரிசேயர் ஒரு பகுதியுமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். 7 அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாகி; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. 8 ஏன்னென்றால், சதுசேயர் உயிர்தெழுதல் இல்லையென்றும், தூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். 9 இதனாலே மிகுந்த இரைச்சல் உண்டானது. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனிதனிடத்தில் ஒரு தவறையும் காணவில்லை; ஒரு ஆவி அல்லது ஒரு தூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே சண்டையிடுவது தகாது என்று வாதாடினார்கள். 10 அதிகமாக கலவரம் உண்டானபோது, பவுல் அவர்களால் காயப்பட்டு விடுவானென்று சேனாதிபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து அகற்றி கோட்டைக்குக் கொண்டுபோகும்படி ஆணையிட்டான். 11 அன்று இரவிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, தைரியமாயிரு; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சி கொடுக்கவேண்டும் என்றார். 12 விடியற்காலமானபோது, யூதரில் சிலர் கூடி, தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் புசிப்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம் செய்துகொண்டார்கள். 13 இப்படி சபதம்செய்து கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள். 14 அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் முப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலை செய்யும் வரைக்கும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் செய்துகொண்டோம். 15 ஆகையால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை மிக சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல சேனாதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் அருகில் வருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள். 16 இந்த சதித்திட்டத்தை பவுலினுடைய சகோதரியின் மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்குத் தெரிவித்தான். 17 அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் சொல்லவேண்டிய ஒரு செய்தி உண்டு என்றான். 18 அப்படியே அவன் இவனைச் சேனாதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு செய்தியைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான். 19 அப்பொழுது சேனாதிபதி அவனுடைய கையைப்பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் சொல்லவேண்டிய செய்தி என்னவென்று கேட்டான். 20 அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை மிக சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்கள். 21 நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யும்வரைக்கும் தாங்கள் உண்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்செய்துகொண்டு, அவனுக்குத்தெரியாமல், உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான். 22 அப்பொழுது சேனாதிபதி: நீ இவைகளை எனக்கு தெரிவித்ததாக ஒருவருக்கும் சொல்லாதே என்று ஆணையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான். 23 பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இரவில் மூன்றுமணி அளவிலே, ஆயத்தம் செய்யுங்களென்றும்; 24 பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்கு குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி, 25 ஒரு கடிதத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது: 26 கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி தெரிவிப்பது என்னவென்றால்: 27 இந்த மனிதனை யூதர்கள் பிடித்துக் கொலைசெய்யப்போகிற வேளையில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன். 28 அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன். 29 இவன் அவர்களுடைய வேதத்திற்கு அடுத்த காரியங்களைக் குறித்துக் குற்றஞ்சாட்டப் பட்டவனென்று அறிந்ததேயல்லாமல், மரணத்துக்காவது கைதுசெய்வதற்காவது ஏற்ற குற்றம் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன். 30 யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சதியோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாகவந்து சொல்லும்படி அவர்களுக்கு ஆணையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான். 31 போர்வீரர்கள் தங்களுக்கு ஆணையிட்டபடியே, பவுலை அழைத்துக்கொண்டு, இரவிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய், 32 அடுத்த நாளில் குதிரைவீரர்களை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். 33 அவர்கள் செசரியா பட்டணத்தை அடைந்து, கடிதத்தை தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். 34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: 35 உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வரும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரண்மனையிலே அவனைக் காவல்பண்ணும்படி ஆணையிட்டான்.
Chapter 24
1 ஐந்து நாளைக்குப்பிறகு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்குரைஞர்களோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக ஆளுநரிடத்தில் முறையீடு செய்தார்கள். 2 அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: 3 கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தாருக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம். 4 உம்மை நான் அதிக சொற்களினாலே உம்மை வருத்தபடுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன். 5 என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அணைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்துக்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். 6 இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்கள் வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம். 7 அப்பொழுது படைத்தலைவன் லீசியா வந்து, மிகவும் துணிகரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய், 8 இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி ஆணையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான். 9 யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள். 10 பவுல் பேச ஆளுநர் அனுமதித்த போது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாய் இந்த நாட்டாருக்கு நீதிபதியாயிருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன். 11 நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள் மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம். 12 தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாகிலும் பட்டணத்திலாகிலும் மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை. 13 இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் நிரூபிக்கவுமாட்டார்கள். 14 உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயபிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி, 15 நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைதிருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 16 இதனால் நான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்க முயற்சிக்கிறேன். 17 பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப்பணத்தை கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன். 18 அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் ஆலயத்திலே புனித சடங்குகளை நான் செய்துகொண்டிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள். 19 அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும். 20 நான் ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும். 21 நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லையென்றான். 22 இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: படைத்தலைவர் லீசியா வரும்போது உங்கள் காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி; 23 பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான். 24 சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான். 25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான். 26 மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான். 27 இரண்டு வருடம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து ஆளுனராக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
Chapter 25
1 பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களான பிறகு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். 2 அப்பொழுது பிரதானஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாக முறையீடுசெய்து, 3 அவனை வழியிலே கொன்றுபோடும்படி சதித்திட்டம் கொண்டவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். 4 அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன். 5 ஆகையால் உங்களில் முடிந்தவர்கள் கூடவந்து, அந்த மனிதனிடத்தில் குற்றம் ஏதாகிலும் இருந்தால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சுமத்தட்டும் என்றான். 6 அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் தங்கியிருந்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நீதிமன்றத்தில் உட்கார்ந்து, பவுலை அழைத்துவரும்படி ஆணையிட்டான். 7 அவன் வந்தபோது, எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிநின்று, தங்களால் நிரூபிக்கக்கூடாத பல கடுமையான குற்றங்களை அவன்மேல் சுமத்தினார்கள். 8 அதற்கு அவன் பதிலாக: நான் யூதருடைய வேதபிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், அரசாங்கத்தையாகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான். 9 அப்பொழுது பெஸ்து யூதருக்கு உதவிசெய்ய விரும்பி, பவுலை பார்த்து: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்றான். 10 அதற்குப் பவுல்: நான் இராயருடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நீதி விசாரிக்கப்படவேண்டியவன்; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர். 11 நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்கு ஏதுவாக ஏதாகிலும் செய்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு முறையிடமாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்துகிற குற்றங்கள் முற்றிலும் பொய்யானதுமல்லாமல், அவர்களுக்குத் தயவுசெய்யும் பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்படைக்கக்கூடாது இராயருக்கு மேல்முறையீடு செய்கிறேன் என்றான். 12 அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு மேல்முறையீடு செய்தாயே; இராயரிடத்திற்கே போவாயென்று பதில் சொன்னான். 13 சிலநாள் சென்ற பின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவுக்கு வந்தார்கள். 14 அவர்கள் அங்கே அநேகநாள் தங்கியிருக்கையில், பெஸ்து பவுலின் விசயத்தை ராஜாவுக்கு தெரிவித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான். 15 நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் முறையீடு செய்து, அவனுக்கு எதிராகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். 16 அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றம் சுமத்தப்பட்ட மனிதன் குற்றம் சுமத்தினவர்களுக்கு நேராகநின்று, சுமத்தின குற்றத்துக்கு தனக்காக எதிர் வாதம் சொல்ல அவனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னே, குற்றம் சுமத்தினவர்கள் சாதகமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன். 17 ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் சிறிதும் தாமதம் செய்யாமல், மறுநாள் நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அந்த மனிதனைக் கொண்டுவரும்படி ஆணையிட்டேன். 18 அப்பொழுது குற்றம் சுமத்தினவர்கள் வந்துநின்று, நான் எண்ணியிருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல், 19 தங்களுடைய மதத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில விவாதத்திற்குரிய அவனுக்கு விரோதமாய்ச் சொன்னார்கள். 20 இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக் குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்று கேட்டேன். 21 அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல் செய்யும்படி ஆணையிட்டேன் என்றான். 22 அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை பார்த்து: அந்த மனிதன் சொல்லுகிறதை நானும் கேட்க விருப்பமாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான். 23 மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து படைத்தலைவர்களோடும் பட்டணத்து தலைவர்களோடுங்கூட நீதிமன்றத்தில் நுழைந்தார்கள். உடனே பெஸ்துவினுடைய ஆணையின்படி பவுல் அழைத்து வரப்பட்டான். 24 அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனிதனைக்குறித்து யூதமக்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது சரியில்லை என்று சொல்லிக் சத்தமிட்டார்கள். 25 இவன் மரணத்துக்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன். 26 இவனைக் குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு உறுதிசெய்யப்பட்ட காரியமொன்றும் எனக்கு புரியவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, 27 இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுத வேண்டிய செய்தி ஏதாகிலும் எனக்கு புரியும் என்று, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.
Chapter 26
1 அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத் தொடங்கினான். 2 அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லா காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். 3 விசேஷமாய் நீர் யூதருடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 4 நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள். 5 நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்துக்கு ஏற்றபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம். 6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாய் நிற்கிறேன். 7 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள். 8 தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன? 9 முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களை செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். 10 அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். 11 எல்லா ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறை கண்டித்து தேவதூஷணம் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்களவரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். 12 இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, 13 மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். 14 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. 16 இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்கு காட்சிகொடுத்து காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன். 17 உன் சொந்தமக்களிடத்தினின்றும் அந்நிய மக்களிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, 18 அவர்கள் என்னைப் பற்றும் நம்பிக்கையினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 19 ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை. 20 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்மாறி குணப்படவும், மனமாறியதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். 21 இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். 22 ஆனாலும் தேவ கருணை பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி சொல்லி வருகிறேன். 23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். 24 இவ்விதமாய் அவன் தனக்காக பதில்சொல்லுகையில், பெஸ்து மிகவும் சத்தமாய்: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். 25 அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன். 26 இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல. 27 அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான். 28 அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்க செய்கிறாய் என்றான். 29 அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்த பாடுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 30 இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, 31 தனியே போய்: இந்த மனிதன் மரணத்துக்காவது பாடுகளுக்கு உரியதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாது இருந்திருந்தால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.
Chapter 27
1 நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூறுப் பேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள். 2 அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டு வழியைபிடித்துப் போகவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனே கூட இருந்தான். 3 மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துச் சேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாய் நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான். 4 அவ்விடம் விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க் காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் .ஓரமாய்ப் பயணம் செய்தோம் 5 பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் பயணித்து , லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். 6 இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை, நூறுப் பேருக்கு தலைவன் அங்கே , எங்களைப் பார்த்து அதில் ஏற்றினான். 7 காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீது பட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஓரமாய்ப் பயணம் செய்தோம் . 8 அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகாமையிலிருந்தது. 9 வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாய் இருக்குமென்று , பவுல் அவர்களை நோக்கி: 10 மனிதர்களே, இந்த பயணத்தினாலே பொருட்களுக்கும், கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய உயிருக்கும் வருத்தமும்,மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். 11 நூறுப் பேருக்கு தலைவன் பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் சொந்தக்காரரையும் அதிகமாய் நம்பினான். 12 அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். 13 தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் வேண்டிக் கொண்டது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் புறப்பட்டு கிரேத்தா தீவுக்கு அருகில் சென்றார்கள் . 14 கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று. 15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். 16 அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகையில் வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம் . 17 அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு, பல உதவிகள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி,புதை மணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். 18 மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அவதிபட்டபடியினால் மறுநாளில் சில பொருட்களை கடலில் போட்டு விட்டார்கள் . 19 மூன்றாம் நாளிலே கப்பலின் ஆயுதங்களை எங்கள் கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம் 20 அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல் போயிற்று . 21 அநேகநாள் அவர்கள் சாப்பிடாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனிதர்களே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. 22 ஆகிலும் மனதில் உறுதியுள்ளவர்களாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பயணச் சேதம் வராது. 23 ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் வணங்குகிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இரவிலே என்னிடத்தில் வந்து நின்று: 24 பவுலே, பயப்படாதே, நீ ரோம பேரரசருக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட பயணம் பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவுபண்ணினார் என்றான். 25 ஆகையால் மனிதர்களே,மனதில் உறுதியுள்ளவர்காளாயிருங்கள் . எனக்குச் சொல்லப்பட்ட படியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். 26 ஆயினும் நாம் ஒரு தீவிலே ஆபத்தை சந்திக்க வேண்டியதாயிருக்கும் என்றான். 27 பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைக் கழிக்கப்பட்டுப் போகையில், நடு இராத்திரியிலே கப்பலாட்களுக்கு ஒரு கரை நெருங்கி வருகிறதாகத் தோன்றிற்று. 28 உடனே அவர்கள் நங்கூரம் விட்டுப் பார்த்த போது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள் ;சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம் விட்டுப் பார்த்தப் போது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள். 29 பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். 30 அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன் பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போட போகிறதுப் போல படகை கடலில் இறக்குகையில், 31 பவுல் நூறுப் பேருக்கு தலைவனையும் பணியாட்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். 32 அப்பொழுது, போர் வீர பணியாட்கள் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள். 33 பொழுது விடிகையில் எல்லாரும் சாப்பிடும் படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். 34 ஆகையால் சாப்பிடும் படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான். 35 இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் சாப்பிடத் தொடங்கினான். 36 அப்பொழுது எல்லாரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள் . 37 கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம். 38 திருப்தியாகப் சாப்பிட்டப் பின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே போட்டு, கப்பலை லேசாக்கினார்கள் . 39 பொழுது விடிந்தபின்பு, எந்த இடம் என்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகத்தை அவர்கள் பார்த்து ; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, 40 நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்து, கரைக்கு நேராய்ப் போய் , 41 இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள் ; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. 42 அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர் வீர பணியாட்கள் யோசனையாயிருந்தார்கள். 43 நூறுப் பேருக்குத் தலைவன் பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், 44 மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.
Chapter 28
1 நாங்கள் தப்பி கரை சேர்ந்த பின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம். 2 அறிமுகமில்லாத அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். 3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின் மேல் போடுகையில், ஒரு விரியன் பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. 4 விரியன் பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனிதன் கொலைப் பாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 5 அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். 6 அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது,தங்கள் எண்ணத்தை மாற்றி ,அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள். 7 தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது ; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் அன்போடு உபசரித்தான் . 8 புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். 9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து. குணமாக்கப்பட்டார்கள். 10 அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள். 11 மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு
தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு, 12 சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம். 13 அவ்விடம்விட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம் செய்து, ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறநாளில் தென்றல் காற்றடிக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து, 14 அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம். 15 அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள். 16 நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுப் பேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற காவலாளியுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். 17 மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், தண்டனைக்குரிய எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். 18 அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். 19 யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் ரோம பேரரசனிடத்தில் உரிமையைக் கேட்கக் வேண்டியதாயிருந்தது; ஆயினும் என் மக்கள் மேல் எந்தஒரு குற்றஞ்சாட்ட வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. 20 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். 21 அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. 22 எங்கும் இந்த மதப் பிரிவுக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். 23 அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள் அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலிருந்து இயேசுவின் நல்லப் பண்புகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து வலியுறித்திப் பேசினான். 24 அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர் , சிலர் நம்பாமலிருந்தார்கள் . 25 இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாய் ,களைந்துப் போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது: 26 நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். 27 இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த மக்களினிடத்திற்கு போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். 28 ஆதலால் தேவனுடைய மீட்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். 29 இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். 30 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, 31 மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.